மவுலிவாக்கத்தில் அபாயகரமான மற்றொரு கட்டிடத்தை இடிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: மவுலிவாக்கத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அபாயகரமான மற்றொரு கட்டிடத்தையும் இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மழையின் போது கட்டுமான பணியின்போது 11 மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பலியானார்கள்.
இதையடுத்து இடிந்த கட்டிடத்துக்கு அருகில் உள்ள 2-வது கட்டிடத்தையும் பாதுகாப்பு காரணங்களுக்காக இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கட்டிட உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கட்டிட இடிப்பு சம்பந்தமாக மீண்டும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி மற்றும் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகினர். அப்போது புதிய கட்டிடம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் அசோக் குமார் குப்தா இடைக்கால அறிக்கை ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பின்னர் விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் மீண்டும் நிபுணர் குழுவுக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மவுலிவாக்கம் புதிய கடிட்டம் குடியிருக்க தகுதியற்றது என்று 4-பேர் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்தது. இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்றம், நிபுணர் குழு அறிக்கையை அடிப்படையாக கொண்டு மற்றொரு கட்டிடத்தையும் இடிக்க உத்தரவிட்டது.
இடிக்க ஆகும் செலவு தொகை தொடர்பான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.