அதிமுகவை தடை செய்யக் கோரிய டிராபிக் ராமசாமி மனு.. விசாரணைக்கே ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
டெல்லி: அதிமுகவைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கே ஏற்க முடியாது என்று கூறி டிஸ்மிஸ் செய்து விட்டது உச்சநீதிமன்ற பெஞ்ச்.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி முன்னதாக ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்களும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் பொது இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணாக்களுக்கு சட்டத்துக்கு புறம்பாக முழு அளவில் காவல் துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர்கள் மீது எந்த வழக்கையும் தமிழக காவல் துறை பதிவு செய்யவில்லை.
எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் அ.தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்களின் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு போலீஸ் ஐ.ஜி ஆகியோரை தங்கள் கடமையில் இருந்து தவறிய குற்றத்தை இழைத்தவர்களாக அறிவிக்க வேண்டும்.
மேலும் இது போன்று சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களிலும், தர்ணாக்களிலும் ஈடுபடும் கட்சிகளின் மீது தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல் தத்து மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த அவர்கள், இது விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி நிராகரித்து, மனுவைத் தள்ளுபடி செய்து விட்டனர்.