நீட் தேர்வுக்கான வயது வரம்பை 30 ஆக உயர்த்தக் கோரிய மனு... தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!
நீட் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் மாற்றம் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்போரின் வயது வரம்பை 30 ஆக அதிகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது வரம்பு 17 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 25 ஆகவும் உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பில் 30.
இந்நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை மாற்றி அமைக்கக் கோரி சில மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்ஏ பாப்டே மற்றும் நாகேஸ்வர ராவ் அமர்வு மனுவை தள்ளுபடி செய்ததோடு, மனுதாரர்கள் தங்கள் மாநிலத்திற்குட்பட்ட உயர்நீதிமன்றங்களை அணுகலாம் என உத்தரவிட்டுள்ளனர்.
சிபிஎஸ்இ முடிவு
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு சிபிஎஸ்இ நிர்ணயிக்கும் வயது வரம்பில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எம்சிஐ விதிகளின் படி சிபிஎஸ்இ நீட் நுழைவுத் தேர்வர்களின் வயது வரம்மை நிர்ணயம் செய்கிறது.
காலம் இல்லை என முறையீடு
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது. கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் ஜாஸ்னா மற்றும் ஷேய்லா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர். மார்ச் 9ல் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இதற்கு பின்னர் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றங்களை அணுகுவது சிரமம் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஜாஸ்னா என்ற மாணவி, வயது வரம்பு குறைவாக இருப்பது தன்னை நேரடியாக பாதிப்பதாகவும் சிபிஎஸ்இ அளித்துள்ள வயது வரம்பை தாண்டி இருப்பதால் தான் நீட் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
தள்ளுபடி செய்த நீதிபதிகள்
அரசியல் சாசனத்திற்கு எதிராக வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டம் அனைவருக்கும் சமநிலையை உருவாக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் நீதிபதிகள் இதனை ஏற்க மறுத்ததோடு, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று மனுவை தள்ளுபடி செய்தனர்.