தற்காலிகமாக தப்பியது ரூ742 கோடி சன் டிவி சொத்து- அமலாக்கப் பிரிவு கையகப்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை!
டெல்லி: ரூ742 கோடி மதிப்பிலான சன் டி.வி. குழுமத்தின் சொத்துகளை வரும் 13-ந் தேதி வரை அமலாக்கப் பிரிவு தம் வசம் கையகப்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் சொத்து முடக்கத்துக்கு எதிராக சன் டி.வி. தாக்கல் செய்த மனுவை 2ஜி பெஞ்சுக்கும் மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு, சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கு, பணப் பரிவர்த்தனை மோசடி என பல வழக்குகள் சன் டி.வி. நிறுவனத்தின் மீது போடப்பட்டுள்ளன. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சன் டிவியின் தலைமை அலுவலக இடம் உட்பட ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகள், வைப்புத் தொகை ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்குவதாக அறிவித்தது. இந்த சொத்து முடக்கத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சன் டி.வி. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியிருந்தது. இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சன் டிவி, தங்களது சொத்து முடக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை 2ஜி வழக்கை விசாரிக்கும் பெஞ்ச் மட்டுமே விசாரிக்காமல் இதர பெஞ்சுகளும் விசாரிக்கலாம் என்ற வாதத்தை முன்வைத்தது.
மேலும் ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை ஜூலை 10-ந் தேதியன்று (இன்று) கையகப்படுத்திக் கொள்ளப் போவதாக அமலாக்கப் பிரிவு அனுப்பிய நோட்டீஸுக்கும் தடை கேட்டிருந்தது சன் டி.வி. தரப்பு.
இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சன் டி.வி. தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான 2ஜி வழக்கின் பெஞ்ச் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த மனு மீது வரும் திங்கள்கிழமை (ஜூலை 13) விசாரணை நடைபெறும். இதனால் வரும் 13-ந் தேதி வரை சன் டி.வி.யின் ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு தம் வசம் கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சன் டி.வி. தற்போது இயங்கி வரும் இடம் உட்பட ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை 3 நாட்களுக்கு அமலாக்கப் பிரிவு தம் வசம் கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி அமலாக்கப் பிரிவு தம் வசம் இந்த சொத்துகளை கையகப்படுத்திவிட்டால் சன் டி.வி தற்போது இயங்கி வரும் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறக் கூடிய நிலைமை ஏற்படும். அது சன் டிவி குழுமத்தின் 33 சேனல் ஒளிபரப்பில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி அந்நிறுவனமே முடங்கும் நிலைமை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.