ஜெ. வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண செலவில் குளறுபடி- கர்நாடகா விளக்கம் அளிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதகாரனின் திருமண செலவில் குளறுபடி இருப்பதாகவும் அது குறித்து கர்நாடகா அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். ஆனால் மேல்முறையீட்டு விசாரணையில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார்.

ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று முதல் விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2 நாட்களாக ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதிவாதங்களை முன்வைத்து வருகிறார். இன்றைய விசாரணையின் முடிவில் நீதிபதிகள் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
அதாவது, ஜெயலலிதா தன்னுடைய வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்காக ரூ6.45 கோடி செலவு செய்ததாக விசாரணை அமைப்பு தெரிவித்திருக்கிறது. இதனை ஆராய்ந்த விசாரணை நீதிமன்றமோ, ஆதாரங்கள் அடிப்படையில் ரூ3 கோடியைக் குறைத்தது. அதனால் திருமண செலவு வெறும் ரூ3 கோடி என்றுதான் தீர்ப்பில் கூறியுள்ளது. அப்படியானால் எஞ்சிய ரூ45 லட்சம் எங்கே போனது?
விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் கணக்கீடுகளில் 90% வித்தியாசம் இருக்கிறது. ஆகையால் சுதாகரன் திருமண செலவு குறித்து கர்நாடகா அரசு நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications