புல்லரின் தூக்கை ஆயுள் தண்டனையாக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திடீர் ஒப்புதல்!!
டெல்லி: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தேவிந்தர்சிங் புல்லரின் கோரிக்கையை ஏற்று ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது,
டெல்லியில் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் காலிஸ்தான் விடுதலை இயக்கத்தின் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் புல்லரின் தூக்கை நிறைவேற்றக் கூடாது என்று அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜனவரி 31-ந் தேதி புல்லரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது. இதன் பின்னர் நடைபெற்ற விசாரணையின் போது டெல்லி ஆளுநரும் புல்லரின் தூக்கை குறைக்க பரிந்துரைத்திருப்பதால் அவரை தூக்கிலிட மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இருப்பினும் ஆளுநரின் பரிந்துர மீது மத்திய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருந்தது. இதில் தலையிட்ட உச்சநீதிமன்றம், புல்லர் கருணை மனுவை ஆளுநர் ஏற்றிருப்பது குறித்து விரைந்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போதும் இதில் மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் கேட்டது. அப்போது மார்ச் 26-ந் தேதி வரை மத்திய அரசு முடிவெடுக்க அனுமதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியது.
இதைத் தொடர்ந்து இன்று புல்லரின் தூக்கை ரத்து செய்யக் கோரும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது புல்லரின் கோரிக்கையை ஏற்று அவரது தண்டனையை குறைக்கலாம் என மத்திய அரசு கருதுவதாக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால் மத்திய அரசு மூன்று தமிழரின் தூக்கை ரத்து செய்யவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மொத்தம் 7 பேரை விடுதலை செய்யவும் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.