அவதூறு வழக்குகளுக்கு எதிரான விஜயகாந்த் மனு: ஜெ. பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட் 2 வாரம் அவகாசம்!
டெல்லி: அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனு மீது முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க மேலும் 2 வார காலம் கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளை எதிர்த்து விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இம்மனுவை கடந்த மாதம் விசாரித்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், ஏற்கனவே உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு ஜெயலலிதா இன்னும் ஏன் பதில் அளிக்கவில்லை என கேள்வி எழப்பினர். இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், அந்த நோட்டீஸ் ஜெயலலிதாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது 213 அவதூறு வழக்குகள் தொடர்ந்தது ஏன் என்பதற்கு 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு, ஜெயலலிதாவுக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த நோட்டீஸை மனுதாரர் தரப்பு வழக்கறிஞரே ஜெயலலிதாவிடம் நேரடியாக வழங்கவும் உத்தரவிட்டிருந்தனர்.
இதனடிப்படையில் ஜெயலலிதாவிடம் நோட்டீஸ் நேரடியாக வழங்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் சார்பில் பிரமாணப் பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்போது ஜெயலலிதா தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜெயலலிதா பதில் மனுவைத் தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் கொடுத்து உத்தரவிட்டது.,