தமிழகத்திற்குத் தண்ணீர் தராவிட்டால்... கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
டெல்லி: தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இன்று கடும் எச்சரிக்கையுடன் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா அரசோ சட்டசபையைக் கூட்டி காவிரி நீர் குடிநீருக்கு மட்டுமே உள்ளது என கூறி உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை.

மீண்டும் உத்தரவு
இதையடுத்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தபோது, கர்நாடகாவின் நடவடிக்கையை நீதிபதிகள் கண்டித்தனர். அத்துடன் தமிழகத்துக்கு 6,000 கன அடி நீரை திறக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரவை மதிக்காத கர்நாடகா
இதனிடையே தமிழகம், கர்நாடகா மாநிலங்கள் பேச்சுவார்த்தையை நடத்தவும் மத்திய அரசு ஏற்பாடு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் கர்நாடகா செயல்படுத்தவில்லை.

மீண்டும் திறக்கவில்லை
அனைத்துக் கட்சிக் கூட்டம், அமைச்சரவை கூட்டம் என வழக்கம் போல இழுத்தடித்தது. டெல்லி பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் கூட கர்நாடகா, காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடவில்லை.

வெளுத்து வாங்கிய சுப்ரீம்கோர்ட்
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை வந்தது. அப்போது கர்நாடகாவை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர், தமிழகத்துக்கு அக்டோபர் 6-ந் தேதி வரை நீரை திறந்துவிட உத்தரவிட்டனர். இந்த உத்தரவுதான் இறுதியானது... இதனை கர்நாடகா அரசு அமல்படுத்தியாக வேண்டும் என்று கண்டிப்புடன் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடைசி வாய்பு
அத்துடன் நீங்கள் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றத்துக்குத் தெரியும்....இருந்தாலும் உங்களுக்கு கடைசி வாய்ப்பு தருகிறோம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications