நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு #cauvery
டெல்லி: பற்றாக்குறை காலங்களில் காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
காவிரியில் 50 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யுயு லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் ஆப்தே ஆஜரானார். கர்நாடகா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாரிமன், கர்நாடகாவில் இன்னும் பருவமழை பெய்யவில்லை; போதுமான மழை பெய்யாததால் காவிரியில் நீரை திறந்துவிட இயலவில்லை என கூறினார்.

தமிழகம் பாதிப்பு
இந்த விசாரணையின் முடிவில் நீதிபதிகள் கூறியதாவது:
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காவிரி நீரை திறந்துவிடாததால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையாவது கர்நாடகா நடைமுறைப்படுத்த வேண்டும்.

வாழு வாழவும் விடு
வாழு... வாழவும் விடு.. நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைப்போம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த பிரச்சனையை கர்நாடகா அணுக வேண்டும். இரு மாநிலங்களும் நல்லிணக்கத்துடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் வேளாண் துறை, வாழ்க்கை அனைத்திலும் பாதிப்பு ஏற்படும்.

நடுவர் மன்றத் தீர்ப்பு
கர்நாடகாவின் மழை எவ்வளவு பெய்தது என்பதை நாங்கள் பார்க்கவில்லை... காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு கர்நாடகா கட்டுப்பட்டு செயல்படுத்த வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு பற்றி கவலைப்படவில்லை என நீங்கள் சொல்லவும் முடியாது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எப்படி நீங்கள் செயல்படுத்தாமல் இருக்க முடியும்?

எவ்வளவு நீர் தர முடியும்?
தமிழகத்துக்கு தற்போதைய நிலையில் எவ்வளவு நீரைத் தர முடியும் என்பது குறித்து வரும் திங்கள்கிழமைக்குள் பதில் தர வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாநில அரசுடன் ஆலோசனை
இது குறித்து ஒன் இந்தியாவிடம் பேசிய கர்நாடகா வழக்கறிஞர்கள் குழுவினர், மாநில அரசுடன் ஆலோசனை நடத்திவிட்டு பதில் மனுவைத் தாக்கல் செய்வோம் எனக் கூறினர்.












Click it and Unblock the Notifications