ஜெ. சொத்து குவிப்பு வழக்கு விசாரணை மீதான தடை நீக்கம்!!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராக தவறியதால் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து பவானி சிங் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இதனால் இந்த வழக்கின் விசாரணைக்கு கடந்த 7-ந் தேதி மூன்று வார கால இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பவானி சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேந்திர ராவ், பவானி சிங்கின் உடல்நிலை தற்போது சீராகிவிட்டது. எனவே, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஆஜராக அவர் தயாராக இருக்கிறார் என தெரிவித்தார்.
இதை ஏற்ற உச்சநீதிமன்றம், அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை குறைத்தும் நீதிமன்றத்தில் கட்ட உத்தரவிட்டதோடு, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை மீதான தடையை நீக்கி தொடர்ந்து நடத்தவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications