மோடி வந்தாச்சு.. தாலிபனிடம் தஞ்சமடையும் தாவூத், கூட்டாளிகள்!
டெல்லி: நரேந்திர மோடி பிரதமராக பதவியில் அமர இருக்கும் வேளையில், தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்ற மிரட்டல்கள் ஒருபுறமிருக்க, இந்தியாவால் தேடப்பட்டு வரும் நம்பர் ஒன் டான் தாவூத் இப்ராகிம், தனது கூட்டாளிகளோடு பாகிஸ்தானை விட்டு தனது இருப்பிடத்தை மாற்ற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி 24ம் தேதி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.
இந்நிலையில், தீவிரவாதத்தை களையெடுப்பதாக தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த மோடி வாக்குறுதி கொடுத்துள்ளார் என்பதால் தாவூத் இப்ராகிம் உள்ளிட்டோர் விவகாரத்தில் மோடி தீவிரமாக செயல்படுவார் என்று தெரிகிறது. எனவே, தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளிகளோடு தனது மறைவிடத்தை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளாராம்.
தாவூத்தைப் பிடிப்பேன்....
தேர்தல் பிரச்சாரத்தின் போது குஜராத் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘தான் ஆட்சிக்கு வந்ததும் பாகிஸ்தானில் இருக்கும் தாவூத்தை இந்தியாவிற்கு பிடித்து வருவேன்' எனத் தெரிவித்திருந்தார் மோடி.
தேடும் பணி....
தற்போது தேர்தலிலும் வென்றாகி விட்டது. பதவியிலும் அமரப் போகிறார் மோடி. விரைவில் புலனாய்வுத் துறையை முடுக்கி தாவூத்தை கைது செய்யும் பணிகளில் மோடி இறங்கி விடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
தாலிபன்களுக்கு அருகே...
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளும் வகையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தாலிபன்களின் ஆதிக்கம் உள்ள பகுதியில் தனது மறைவிடத்தை மாற்ற முடிவு செய்துள்ளாராம் தாவூத்.
தீவிரவாதத்தை பொறுக்காது...
சமீபத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நிதின் கட்காரி டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, ‘தங்களது அரசு ஒரு போதும் தீவிரவாதத்தைப் பொறுத்துக் கொள்ளாது' எனக் கூறியிருந்தார்.
எதுவும் செய்யாத ஷிண்டே....
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே, தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகவும், இதுதொடர்பாக அமெரிக்காவின் எப்பிஐயுடன் தொடர்பு கொண்டிருப்பதாகும் கூறி வந்தார். ஆனால் அப்போது உள்துறை செயலாளராக இருந்தவரும், தற்போது பாஜகவில் இணைந்துள்ளவருமான ஆர்.கே.சிங் அதை மறுத்துள்ளார். அப்படியெல்லாம் ஷிண்டே எதையம் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
நம்பிக்கை...
அதேபோல 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் மிகத் திறமையாக ஈடுபட்டவரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒய்.சி. பவார், தாவூத் இப்ராகிமை இந்தியாவால் நிச்சயம் நாடு கடத்திக் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மோடியின் வில்பவர்....
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மோடி மிகவும் திறமையானவர், 'வில் பவர்' கொண்டவர். நினைத்ததை சாதிக்கக் கூடியவர். அப்படிப்பட்ட ஒரு திறமையாளர்தான் உயர் மட்டத்தில் இருக்க வேண்டும். எனவே மோடியால் நிச்சயம் தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானை விட்டு தூக்கி வர முடியும். இதை நான் தற்போது பாஜக உறுப்பினராக இருந்து சொல்லவில்லை. ஒரு காவல்துறை அதிகாரியாகவும்,நான் மோடி மீது நம்பிக்கை வைத்து சொல்கிறேன். இது ஒன்றும் மோடிக்கு கஷ்டமான காரியம் அல்ல. 'வில் பவர்'தான் இங்கு முக்கியம். அது மோடியிடம் உள்ளது என்றார்.
தாவூத் என்ன அல்வா துண்டா..?
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த தாவூத்தின் முக்கியக் கூட்டாளியான சோட்டா சகில், ‘தாவூத் ஒன்றும் அல்வா துண்டு இல்லை, யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள...' எனக் கூறியுள்ளார்.
மீண்டும் ஏலம்...
தாவூத்தை நேரடியாக பிடிப்பதற்கு முன்னதாக மத்திய அரசு, வருமான வரித் துறை வசம் இருக்கும் அவனது மும்பை சொத்துக்களை அழிக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இருமுறை இச்சொத்துக்கள் ஏலத்துக்கு விட முயற்சி செய்யப்பட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications