லவ் டுடே பாணியில்.. இன்ஸ்டாவில் வேறொரு இளைஞருடன் பழகிய மாணவி.. கடைசியில் சக மாணவனே வெறிச்செயல்!
சினிமா இடைவேளையின் போது மாணவி வெளியே சென்றிருக்கிறார். அப்போது அவரது செல்போனை மாணவிடம் தந்து சென்றிருக்கிறார். ஆனால், செல்போனை லாக் செய்ய அவர் மறந்துவிட்டார்.
ராஞ்சி: படிக்கும் வயதில் படிக்காமல் காதலில் விழுந்து வாழ்க்கையை சீரழிக்கும் இளைஞர்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜார்க்கண்டில் நடந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
லவ் டுடே பாணியில், இன்ஸ்டாகிராமில் வேறொரு இளைஞருடன் பழகி வந்த மாணவியை அவரது காதலனான பள்ளி மாணவன் இரும்புக் கம்பியால் அடித்தே கொலை செய்திருக்கிறார்.
மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வாங்கிக் கொடுப்பதன் விளைவுகளையும், அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும் என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

பள்ளிக் காதல்..
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள உர்ஜாநகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ப்ளஸ் டூ படிக்கும் 17 வயது மாணவி ஒருவரும், அதே வகுப்பில் பயிலும் மாணவனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பள்ளியில் தனியே சந்தித்து பேசுவதையும், பிறகு வீட்டுக்கு சென்றதும் மணிக்கணக்கில் செல்போனில் பேசுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

செல்போனை பார்த்த மாணவன்
அதேபோல, வாட்ஸ் அப், இன்ஸ்டாவிலும் இருவரும் சாட் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் திரைப்படம் ஒன்றுக்கு சென்றுள்ளனர். இதனிடையே, இடைவேளையின் போது மாணவி வெளியே சென்றிருக்கிறார். அப்போது அவரது செல்போனை மாணவனிடம் தந்து சென்றிருக்கிறார். ஆனால், செல்போனை லாக் செய்ய அவர் மறந்துவிட்டார். அப்போது அவரது செல்போனை திறந்து பார்த்த மாணவன், இன்ஸ்டாகிராமுக்கும் சென்று பார்த்திருக்கிறான். அப்போது, அந்த மாணவி வேறொரு இளைஞருடன் காதல் பேச்சுகளை பேசியிருப்பது தெரியவந்தது.

தீர்த்துக்கட்ட முடிவு
இதை பார்த்த மாணவனுக்கு ஆத்திரம் அடக்க முடியாமல் வந்தது. தன்னை காதலிக்கும் போதே வேறொரு ஆணுடன் இப்படி பேசி வருகிறாளே என நினைத்துள்ளான். பின்னர், அந்த மாணவி வந்ததும் எதுவும் தெரியாததை போல நடித்த மாணவன், அவரை வீட்டுக்கு சென்று விட்டிருக்கிறான். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து மனம் குமுறிய மாணவன், மாணவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தான். அதன்படி, கடந்த 8-ம் தேதி ஹோலி பண்டிகை அன்று தனது தோழிகளை பார்ப்பதற்காக டூ வீலரில் அந்த மாணவி சென்றிருக்கிறார்.

கைது நடவடிக்கை
இதை பார்த்த மாணவன் அவரை பின்தொடர்ந்து சென்று, பாதி வழியில் மறித்திருக்கிறான். அப்போது, இன்ஸ்டாவில் வேறு இளைஞருடன் பேசி வருவது குறித்து கேட்டுள்ளான். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் கொண்டு வந்திருந்த இரும்புக் கம்பியால் மாணவியை சரமாரியாக தாக்கியுள்ளான் அந்த மாணவன். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை அருகில் உள்ள வயல்வெளி புதருக்குள் போட்டுவிட்டு அந்த மாணவன் சென்றுவிட்டான். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றினர். பின்னர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவனை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications