ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சேர்ந்து செய்த கொலை.. டெல்லியில் மீண்டும் பயங்கரம்
டெல்லியை சேர்ந்த சில பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஒருவரை கொலை செய்து இருக்கிறார்கள்.
Recommended Video
டெல்லி: டெல்லியை சேர்ந்த சில பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஒருவரை கொலை செய்து இருக்கிறார்கள். அந்த பள்ளி மாணவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் இந்த கொலை ஒரு சிறிய செல்போன் சார்ந்த பிரச்சனை காரணமாக ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். அந்த மாணவர்கள் அந்த நபரை கொலை செய்தது மட்டுமில்லாமல் அங்கு இருந்த நபர்களையும் அமைதியாக இருக்கும் படி மிரட்டி இருக்கின்றனர்.
தற்போது டெல்லியில் உள்ள பள்ளி முழுக்க இந்த மாணவர்களை தேடி வருகின்றனர். மேலும் அவர்களது வரைபடத்தை வெளியிடும் முடிவிலும் உள்ளனர்.
செல்போன் தொலைந்தது
டெல்லியில் முக்கிய இடங்களில் ஒன்றான 'அஷாரம் சவுக்' என்ற பகுதியில் செல்லும் பேருந்து ஒன்றில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பேருந்தில் இருந்த நபர் ஒருவர் தன்னுடைய செல்போனை காணவில்லை என்று கூறி கூச்சலிட்டு இருக்கிறார். மேலும் அவர் அங்கு இருந்த அனைத்து நபர்களிடமும் தனது செல்போனை தேடி இருக்கிறார். இதனால் அவருக்கும் அங்கு இருந்த 6 பள்ளி மாணவர்களுக்கு இடையில் பெரிய பிரச்சனை உருவாகி இருக்கிறது.
பேருந்தில் நடந்த கொலை
இதையடுத்து அந்த ஆறு மாணவர்களும் ஒன்றாக சேர்ந்து அந்த நபரை தாக்கி இருக்கின்றனர். மேலும் இரண்டு மாணவர்கள் அவர் கையை பிடித்துக் கொள்ள மற்ற அனைவரும் சேர்ந்து அந்த நபரின் கழுத்தை பேருந்திலேயே வைத்து அறுத்து இருக்கின்றனர். இதை தடுக்க வந்த நபர்களையும் அந்த மாணவர்கள் தாக்கி இருக்கின்றனர். மேலும் இதை புகைப்படம் எடுத்தவர்களையும் மோசமாக தாக்கி உள்ளனர்.
தப்பி ஓடினார்கள்
இந்த நிலையில் அவர்கள் அந்த நபர் மரணம் அடைந்து விட்டாரா என்பதை பொறுமையாக நின்று உறுதி செய்து உள்ளனர். அதன்பின்பே அவர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். மரணம் அடைந்த நபருக்கு 20 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசையில் தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது.
தேடுதல் வேட்டை
தற்போது போலீசார் இவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பயணிகளின் வாக்குமூலத்தின் படி இவர்களது வரைபடங்கள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் அவர்களது பள்ளி சீருடையை போலவே 16 பள்ளிகள் சீருடைகள் கொண்டு இருப்பதால் தற்போது ஒவ்வொரு பள்ளியாக போலீசார் விசாரித்து வருகின்றனர். டெல்லி பள்ளிகளில் கடந்த சில மாதங்களாக நிறைய கொலை சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.