பஞ்சாப் பள்ளியில் மாணவிகளை ஆடையை அவிழ்த்து சோதனையிட்ட ஆசிரியை
சன்டிகர்: பஞ்சாபில் ரூ.500 திருட்டு போனதால் 13 மாணவிகளை ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மதியாலா கிராமத்தில் உள்ள அரசு பெண் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் ஹர்ஜித் கவுர். அவருடைய பர்ஸில் இருந்து ரூ.500 தொலைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கவுர் 13 மாணவிகளை ஆடைகளை அவிழ்க்கச் செய்து சோதனையிட்டுள்ளார். மேலும் பணம் கிடைக்காததால் அந்த 13 பேரையும் தலா ரூ.50 அபராதம் செலுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு சென்ற மாணவிகள் பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறினர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள ஆசிரியையை தேடி வருகிறார்கள்.
தங்களை ஆசிரியை 3 முறை ஆடையை அவிழ்த்து சோதனை செய்ததாக காஜல் என்ற மாணவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் உத்தரவை அடுத்து இநத் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை மாவட்ட கல்வித் துறை அமைத்துள்ளது.