ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி.. சுழற்சி முறை வகுப்புகள்
அமராவதி: ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
ஆயினும் பள்ளித் திறப்பு விவகாரத்தில் மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களும் பள்ளிகள் திறப்பது குறித்து தீவிரமாக யோசனை செய்து வருகின்றன.
தமிழகத்தை பொருத்தவரை இப்போது பள்ளிகள் திறக்கப்படாது என அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
ஹைதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை.. அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்
இதற்கான அறிவிப்பை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார். ஒற்றைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும், இரட்டை படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் நடைபெறும். அதுவும் காலை நேரத்தில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்திற்கு மட்டுமே இந்த முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் அதன்பிறகு சூழலை மதிப்பிட்டு டிசம்பரில் பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக அந்த நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.