ஓய்ந்த போராட்டம்.. சீமாந்திராவில் இயல்பு நிலை திரும்புகிறது
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிராக 2 மாத காலமாக நடைபெற்ற போராட்டங்கள் ஓய்ந்த நிலையில் சீமாந்திராவில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கானா தனி மாநிலம் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் தொடர் போராட்டம் நடந்து வந்தது.
கடற்கரையோர மாவட்டங்களில் தொடர் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூலை 31-ந் தேதி முதல் ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும் தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஒரு மாத காலத்துக்குப் பின்னர் பதற்றம் சற்று தணிந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் சித்தூர் உள்ளிட்ட ஆந்திர எல்லை மாவட்டங்களுக்கு மட்டும் ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அரசு நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அனைத்து போராட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன.
இதையடுத்து சீமாந்திரா பகுதிகளில் தற்போது இயல்பு நிலை திரும்புகிறது. மேலும் விஜயநகரம் பகுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 14 மணி நேரத்திற்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications