3வது நாளாக பற்றி எரிகிறது சீமாந்திரா..மின்சாரம் முற்றிலும் துண்டிப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் 3வது நாளாக வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. சீமாந்திரா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 70 நாட்களாக அமைதி வழி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மத்திய அமைச்சரவை தெலுங்கானாவுக்கு ஒப்புதல் தெரிவித்த நிலையில் கடந்த 3 நாட்களாக பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளன.
இந்த போராட்டத்தில் 30 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். இதனால் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் ஐடி நிறுவனங்களுக்கு சிக்கல்
இதனால் ஹைதராபாத்தில் இயங்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ரயில் போக்குவரத்து பாதிப்பு
மேலும் ரயில் போக்குவரத்தும் கடுமையான பாதிப்புக்குள்ளானது. நாட்டின் 2வது மிகப் பெரிய ரயில் நிலையமான விஜயவாடாவில் ஏராளமான ரயில்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

விஜயநகரத்தில் தொடர் ஊரடங்கு
சீமாந்திராவிலேயே விஜயநகரத்தில்தான் அதிகளவில் வன்முறை வெடித்திருப்பதால் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வாகனங்கள் எரிப்பு
இதேபோல் சீமாந்திராவின் பல நகரங்களில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடியே கிடக்கின்றன. தொடர்ந்தும் அங்கு பதற்றமான நிலைமையே நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications