மோடியை முதலில் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும்: சொல்வது லாலு!
பாட்னா: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பேசி புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கிரிராஜ்சிங், தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசுகையில், மோடியை பிரதமராக ஏற்காதவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப்போக வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

அதைத் தொடர்ந்து நரேந்திர மோடி, தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தி கொண்டுவருவேன் என்று கூறினார். இதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் இந்த பிராந்தியத்தில் நிலையற்ற அரசியல் சூழ்நிலையை மோடி உருவாக்குகிறார் என்றும் அவர் சாடியிருந்தார்.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், யார் யாரையோ பாகிஸ்தானுக்கு அனுப்பி வையுங்கள் என்று பாஜகவினர் பேசுகிறார்கள். பேசாமல் மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்குதான் அவருக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என்று கூறினார்.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லாலுவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சானவாஸ் ஹூசேன், நாட்டிலேயே பிரபலமான தலைவர் லாலுதான்.. அவரையே பேசாமல் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
லாலுவுக்கு எதிராக வழக்கு
இதனிடையே கட்சி வேட்பாளர்களுக்கு லாலு பிரசாத் யாதவ் தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளத்தில் லாலுவுக்கு எதிராக போர்க்கொடிய தூக்கிய 13 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சகுனி செளத்ரியின் மகன் சாம்ராட் செளத்ரிதான் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அதாவது ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கட்சி விதிகளின் படி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை இழப்பார். அப்படிப்பட்ட நிலையில் லாலு பிரசாத் யாதவ், கட்சி வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்து வழங்கியது செல்லாது என்று கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications