மோடியின் ஜம்மு காஷ்மீர் வருகைக்கு எதிர்ப்பு- முழு அடைப்புக்கு ஹூரியத் மாநாடு அழைப்பு!
ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் ஜம்மு காஷ்மீர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹூரியத் மாநாட்டு கட்சி முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சாசனப் பிரிவை நீக்க மோடி அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு எதிராக அம்மாநிலத்தில் போராட்டங்கள் வெடித்தன. மேலும் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பண்டிட்டுகளை குடியேற்றவும் மோடி அரசு முயற்சிகளை மேற்கொள்வதாக அறிவித்தது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வரும் 4-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். இதனால் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஹூரியத் மாநாட்டு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர் மிர்வாஸ் உமர் பரூக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண வேண்டும்; ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது பொருளாதார பிரச்சனை இல்லை. மோடி அரசு ஒரு பொருளாதார பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறது.
ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 4-ந் தேதியன்று முழு அளவிலான கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.