திகார் சிறையில் நாளை ஓம் பிரகாஷ் சவுதாலா சரணடைய டெல்லி ஹைகோர்ட் உத்தரவு!!
டெல்லி: ஆசிரியர் தேர்வு முறைகேடு ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து இடைக்கால ஜாமீன் பெற்றிருந்த இந்திய தேசிய லோக்தளம் கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலாவை நாளை திகார் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சிக்கியவர். 2000-ம் ஆண்டு 3 ஆயிரம் இளநிலை ஆசிரியர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 8 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் சவுதாலா உள்ளிட்டோர் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் அவரது சகோதரர் மறைவைக் காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் பெற்றார் சவுதாலா.

அதன் பின்னர் வருகிற 15-ந் தேதி நடைபெறும் ஹரியானா மாநில தேர்தலுக்காக அவர் தற்போது பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சவுதாலா நிபந்தனை ஜாமீனை மீறியுள்ளதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது.
இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், சவுதாலாவை நாளையே திகார் சிறை அதிகாரிகளிடம் சரணடைய உத்தரவிட்டது. அத்துடன் தேவைப்பட்டால் சவுதாலாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் அனுமதி அளித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்,.












Click it and Unblock the Notifications