சென்னை-பெங்களூரு இடையே "நான் ஸ்டாப்" பஸ்கள்... அறிமுகப்படுத்தும் எஸ்.இ.டி.சி!
பெங்களூரு: சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, இடைநில்லா பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் நேரம் மிச்சப்படும் என்று ஆசைகாட்டுகிறது தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம்.
தென்னிந்தியாவில் அதிகம் போக்குவரத்து நடைபெறும் இரு நகரங்கள் சென்னை மற்றும் பெங்களூரு ஆகும். இரு நகரங்களுக்கிடையேயும், ரயில்கள், பஸ்கள் நாள் முழுவதும் இயக்கப்பட்டு வந்தாலும், கூட்டம் குறையவில்லை. அதிலும் குறிப்பாக, வீக் என்ட் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி முடியும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியுள்ளது.

ஆம்னி பஸ்கள் அதிகம்
சென்னை - பெங்களூரு மார்க்கத்தில், அதிகளவில் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சரியான நேரத்திற்குள், பயண துாரத்தை கடந்து செல்லும் இந்த பஸ்களுக்கு, பயணிகளிடம் வரவேற்பு அதிகம். ஆம்னி பஸ்களைவிடவும் அதிக வசதி கொண்ட பஸ்களை கர்நாடக அரசு பேருந்து கழகம் இயக்குகிறது.

கர்நாடக பஸ்களில் அசத்தல்
ஏசி வோல்வோ, மைக்ரோவேவ் ஓவன்-கிச்சன் வசதி கொண்ட வோல்வோ, கழிவறை வசதி கொண்ட வோல்வோ, மல்டி-ஆக்சில், ஒவ்வொரு இருக்கைக்கும் டிவி வசதி, சொகுசு பேருந்து என கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், தனியாரைவிடவும் அதிக வசதி கொண்ட பஸ்களை இந்த மார்க்கத்தில் இயக்குகிறது. எனவே, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட உயர்தட்டு மக்கள் தமிழக அரசின் பஸ்களை ஏறெடுத்து கூட பார்ப்பதில்லை. ஆம்னி அல்லது கர்நாடக அரசு பஸ்களைத்தான் மேல்தட்டு மக்கள் நாடுகின்றனர்.

இதுக்கு பேரு விரைவு பேருந்தாம்..ஹி..ஹி..
நடுத்தர வர்க்கத்தினரும், வேறு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்களும்தான் தமிழக விரைவு (!) பேருந்துகளை நாடுகின்றனர். அது பெயருக்குதான் விரைவு பேருந்தே தவிர, விரைவில்லா பேருந்து என்ற பெயர்தான் அதற்கு சரியாக இருக்கும். ஜன்னல்களில் ஸ்கிரீன் துணி இருக்காது என்பதால், இரவில் தூங்குவது பெரும் சிரமமாக இருக்கும். ஆல்டோ கார்கள் கூட பரவாயில்லை, பல நேரங்களில் பல்சர் பைக்குகள் கூட இந்த பஸ்களை ஓவர்-டேக் செய்து போவதை பார்க்கும் பயணிகளின் ரத்தம் கொதிக்கும். ஆனால் அதைவிட வேகமாக போக முடியாதபடி வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதையும், ஒருவேளை வேகமாக போனாலும், பஸ்சின் உதிரி பாகங்கள் எங்கெல்லாம் சிதறி ஓடுமோ என்ற அச்சத்தையும் நினைத்து பார்த்து, தங்கள் ரத்த கொதிப்பை பயணிகள் அடக்கிக் கொள்வார்கள்.

இடை நில்லா பேருந்துகள்
எனவேதான், சென்னை - ஓசூர் மற்றும், சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்படும் தமிழக போக்குவரத்துக் கழக பஸ்கள், பெரும்பாலான நேரங்களில் காலியாக வே உள்ளன. காலம் கடந்த ஞானோதயமாக, இந்த மார்க்கத்தில் ஓடும் சில பஸ்களை இடைநில்லா பேருந்துகளாக மாற்றியுள்ளனர்.

சாமானிய பேருந்துகள்
விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, ஓசூருக்கு, 34 சாதாரண பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், வேலுார் மண்டலத்தில் இருந்து இயக்கப்படும், ஏழு பஸ்கள் இடைநில்லா பஸ்களாக மாற்றப்பட்டு உள்ளன. 'டைம் சேவிங் சர்வீஸ்' என, அழைக்கப்படும் இந்த பஸ்கள், ஐந்தரை மணி நேரத்தில் ஓசூர் சென்றுவிடுமாம். இந்த பஸ்கள், முன்பெல்லாம் ஒசூர் செல்ல, ஏழு மணி நேரம் ஆனது. தற்போது, பூந்தமல்லி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட, பெரும்பாலான பஸ் நிலையங்களுக்கு செல்லாமல், நேரடியாக ஓசூர் செல்லும் வகையில் இயக்கப்படுகிறது.

7 விரைவு பஸ்கள் இடை நிற்காது
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை - பெங்களூரு இடையே, 32 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், ஏழு பஸ்களை, 'ஹைவே ரைடர், அல்லது ரெயின்போ ரைடர்' என, பெயர் மாற்றி உள்ளனர். இவை, ஓசூரில் மட்டும் நிறுத்தப்படும். பெங்களூருவுக்கு, எட்டு மணி நேரத்திற்குள் சென்றுவிடும் (இடையில் நின்று வந்தாலும் இதே நேரம் ஆகிவந்தது என்பதுதான் இதில் வேடிக்கை). இருந்தாலும், வேகமாக செல்லும் என்ற நம்பிக்கையில் இந்த பஸ்களில் பயணிகள் ஏறத்தொடங்கியுள்ளனர்.

நீங்க சரிபட்டு வரமாட்டீங்க..
அதே நேரம் இயற்கை உபாதைகளை கழிக்க சிறிது நேரம் நிறுத்துவதில் தப்பில்லை என்றும் பயணிகள் பலர் கூறுகின்றனர். இன்னும் சிலரோ, பாடாவதி பஸ்களை வைத்துக் கொண்டு பாய்ந்து சென்றால், பஸ் தாங்காது என்றும் அச்சப்படுகின்றனர். என்னதான் உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகாது என்பார்கள். அதேபோல பாடாவதி பஸ்களை வைத்துள்ள தமிழக போக்குவரத்து கழகம் என்னாதான் இடைநில்லாமல் ஓடினாலும், மக்கள் சொல்வது என்னவோ "நீங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டீங்க பாஸ்..." என்பதுதான்.












Click it and Unblock the Notifications