டெல்லியைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டைத் தாக்கியது கடும் சூறாவளி புயல்- 7 பேர் பலி
ராஞ்சி: டெல்லியைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை வீசிய கடும் சூறாவளி புயல் காற்றில் சிக்கி 7 பேர் பலியாகினர். பலத்த காற்றால் மின் கம்பங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து வீழ்ந்தன.
டெல்லியில் நேற்று வெயில் வெளுத்து கொண்டிருந்தது. மாலையில் திடீரென மேகங்கள் மூட கடுமையான புழுதிப் புயல் தாக்கியது. இதனால் டெல்லிவாசிகள் திகைத்துப் போயினர் இதில் 9 பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கடுமையான புயல் காற்று வீசியது. இதில் சத்ரா மாவட்டத்திற்குட்பட்ட கொனா கிராமத்தில் ஒரு மரத்தடியின் கீழ் உறங்கிக்கொண்டிருந்த தந்தை, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகன் உள்ளிட்டோர் அந்த மரம் சாய்ந்து வீழ்ந்ததில் அதன் கீழே சிக்கி பரிதாபமாக பலியானார்கள்.
அதே போல் தன்பாத் மாவட்டத்திலுள்ள பாக்தாண்ட் கிராமத்தில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் மூன்று பேர் பலியானார்கள். இந்த புயல் அதிகாலை 4.30 மணியளவில் வீசிய இந்த புயலின் காரணமாக ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், ஹசாரிபாக், லதேஹார் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.