கருவின் பாலினத்தைக் கண்டறிய தடையை மீறி விளம்பரமா? கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட்டுக்கு நோட்டீஸ்
டெல்லி : தாயின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறியும் சோதனைக்கு தடையை மீறி விளம்பரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கூகுள் இந்தியா, யாகூ இந்தியா, மைக்ரோசாப்ட் கார்ப்போரேஷன் இந்தியா ஆகிய இணையதளங்களுக்கு எதிராக சாபு மாத்யூ ஜார்ஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கருவில் இருக்கும் குழந்தை, ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோதனை குறித்த விளம்பரங்கள் மற்றும் தகவல்களை உலகம் முழுவதும் முடக்குமாறு அந்த இணையதளங்களுக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், அதை அவை கடைபிடிக்காமல், இந்திய சட்டங்களை மீறி வருவதாக அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் ஆஜராகி வாதாடினார். அதையடுத்து, இந்த குற்றச்சாட்டுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் ஆகிய இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications