உறவினராலேயே பலாத்காரம் – 22வது மாடியிலிருந்து குதித்து பெண் வழக்கறிஞர் தற்கொலை
மும்பை: மும்பை மலாடு பகுதியில் 22வது மாடியில் இருந்து பெண் வழக்கறிஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மலாடு மேற்கு, சிஞ்சோலி பந்தர் கிங்ஸ்டோன் பகுதியை சேர்ந்த பெண்மணி சோனி பட்டேல். அவர் அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 22வது மாடியில் உள்ள வீட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சோனி மும்பை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த சோனி பட்டேல் குளியலறைக்குச் சென்றார். திடீரென அவர் குளியலறை ஜன்னலை திறந்து கீழே குதித்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து பதறி போன கட்டிட காவலாளி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள பகவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மலாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அவருடைய தூரத்து உறவினர் ஒருவரின் பாலியல் ரீதியான் துன்புறுத்தல்களே அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் மகாராஷ்டிர மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் வித்யா தாக்கூர் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.