பாலியல் சீண்டலா.. புகார் தர தயக்கமா.. நாங்க இருக்கோம்: பெங்களூர் காவல்துறை புது முயற்சி
பெங்களூர்: பாலியல் துன்புறுத்தலுக்கு (sexual harassment) உள்ளாகும், பெண்கள், காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க தயங்குவதுதான், காமுகர்களுக்கு வசதியாக போய்விடுகிறது. தொடர்ந்து உரச தொடங்குகின்றனர். பெண்களுக்கு சட்டம் என்னதான் பாதுகாப்பு வழங்கினாலும், அதை பயன்படுத்த பெண்கள் முன்வராததற்கு பயம், வெட்கம் போன்ற பல காரணங்கள் உண்டு. இந்த தயக்கங்களை தவிடுபொடியாக்கி, பாதிக்கப்பட்ட பெண்களை காவல் நிலையம் வரவைக்க பெங்களூர் போலீசார் தொடங்கப்போகும் புது திட்டம்தான் ரெடி டூ ரிப்போர்ட் (readytoreport).

நாங்க ரெடி, அப்போ நீங்க?
பெங்களூர் காவல் துறை, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா என்ற அமைப்பு இணைந்து, ரெடி டூ ரிப்போர்ட் கோஷத்தை முன் வைக்க உள்ளன. 2014-16ம் ஆண்டு காலத்தை, இதன் முதல் கட்டமாக வரையறுத்துள்ளனர்.

10 ஸ்டேஷன்கள்
பெங்களூர் நகரிலுள்ள எலக்ட்ரானிக்சிட்டி, கோரமங்களா, இந்திராநகர், அசோக்நகர், ஒயிட்பீல்ட், பசவனகுடி, சதாசிவநகர், கப்பன்பார்க், சிக்பேட்டை, யஷ்வந்த்பூர் ஆகிய 10 காவல் நிலையங்கள், இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பிரண்ட்லி ஸ்டேஷன்கள்
இந்த பத்து காவல் நிலையங்களும், புகார்களை ஊக்குவிக்கும் காவல் நிலையங்கள் என்று அழைக்கப்படும். இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பாலியல் சீண்டல், பலாத்கார வழக்குகள் வித்தியாசமாக கையாளப்படும். சுருக்கமாக சொல்லப்போனால் 'புகார்தாரர் பிரெண்ட்லி'யாக இக்காவல் நிலையங்கள் செயல்படும்.

சட்ட விழிப்புணர்வு
எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையை வலுவாக பதிவு செய்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சட்டத்தில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்த தெளிவை கொடுப்பதும் இப்போலீசாருக்கு பணியாகும். அப்படி பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்கும்போதும், அவருக்கு விளக்கம் தரப்படும்போதும், பெண் காவலர்களும் உடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

வெப்சைட்டும் இருக்கு
www.readytoreport.in என்ற வெப்சைட் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதில், எவ்வாறு கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அசத்தல் வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications