செக்ஸ் தொல்லை புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல் நிபுணர் 'நோபல்' பச்சௌரி.. மருத்துவமனையில்
டெல்லி: பாலியல் புகாரில் சிக்கி ஐ.நா. பருவநிலை மாற்ற குழுவின்(ஐபிசிசி) தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஆர்.கே. பச்சௌரி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா. பருவநிலை மாற்ற குழுவின்(ஐபிசிசி) தலைவராக இருந்தவர் ஆர்.கே. பச்சௌரி(74). அவர் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவன(டிஇஆர்ஐ) தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் டிஇஆர்ஐ- இல் பணிபுரியும் 29 வயது பெண் ஒருவர் கடந்த 13ம் தேதி பச்சௌரி மீது டெல்லி போலீசில் பாலியல் புகார் அளித்தார். தான் டிஇஆர்ஐ-இல் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சேர்ந்ததில் இருந்து பச்சௌரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

பச்சௌரி இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் பச்சௌரி மீது பாலியல் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவரை பிப்ரவரி 26ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அவர் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
இதற்கிடையே உடல் நலக்குறைவு காரணமாக பச்சௌரி புதன்கிழமை டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஐ.நா. பருவநிலை மாற்ற குழுவின்(ஐபிசிசி) தலைவர் பதவியை புதன்கிழமை ராஜினாமா செய்தார். மேலும் டிஇஆர்ஐ அலுவலகத்திற்கு 2 மாத விடுப்பு கடிதம் அனுப்பியுள்ளாராம்.
டெல்லி போலீசார் அந்த பெண்ணிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். பச்சௌரி தன்னை மிரட்டியதாக அந்த பெண் போலீசில் தெரிவித்துள்ளார்.
2007ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஐபிசிசிக்கு கிடைத்தது. அந்த பரிசை ஐபிசிசி சார்பில் அதன் தலைவரான பச்சௌரி தான் வாங்கினார். நோபல் பரிசு பெற்ற அமைப்பின் தலைவர் பதவியை தான் அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications