ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் பெயர் பட்டியலில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி சக்திகாந்த் தாஸ்....
டெல்லி: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக யார் நியமிக்கப்படலாம் என யூகப் பட்டியலில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் பதவி வகித்து வருகிறார் சக்தி காந்த தாஸ்.
ஸ்டேட் பாங் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் ரகுராம் ராஜனுடன் சர்வதேச நிதியத்தில் பணிபுரிந்த மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியத்துக்கும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் ரிசர்வ் வங்கி ஆளுநராக 2003-ம் ஆண்டு ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டார். முனர் சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநராக பணியாற்றியவர் ரகுராம் ராஜன்.
2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று முன்கூட்டியே சரியாக கணித்துக் கூறி, உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். ரிசர்வ் வங்கி ஆளுநரான ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் 4-ந் தேதி நிறைவு அடைகிறது.
சு.சுவாமி கடும் எதிர்ப்பு
மீண்டும் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் அமர்த்தப்படுவாரா என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்தது. இதற்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 2 முறை கடிதமும் அனுப்பினார் சு.சுவாமி.
மனதளவில் இந்தியர் அல்ல
அக்கடிதத்தில் அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்துள்ள ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையான இந்தியர் அல்ல. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கியிருந்தார் சுவாமி. இது கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. பிரதமர் மோடி கூட, ரகுராம் ராஜனின் பதவி நீட்டிப்பு விவகாரத்தை ஊடகங்களில் விவாதப் பொருளாக்க முடியாது என கூறியிருந்தார்.
ரகுராம் ராஜன் அறிவிப்பு
தம் மீதான சுப்பிரமணியன் சுவாமியின் புகார்கள் குறித்தோ, தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் நீடிப்பது குறித்தோ எந்த ஒரு கருத்தையும் ரகுராம் ராஜன் தெரிவிக்காமல் இருந்தார். இதனிடையே தாம் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2-வது முறையாக பொறுப்பு ஏற்கப்போவதில்லை என்று நேற்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.
அமெரிக்கா செல்கிறார்...
மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்காலம் முடிந்ததும் ரகுராம் ராஜன் மீண்டும் அமெரிக்கா சென்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியில் சேருவார் எனவும் கூறப்படுகிறது. ரகுராம் ராஜனின் அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால் சுப்பிரமணியன் சுவாமியோ, தாம் 2-வது முறையாக அந்த பதவியில் நியமிக்கப்படமாட்டோம் என்பதை உணர்ந்துவிட்டார் ரகுராம் ராஜன் என கிண்டலடித்திருந்தார்.
அடுத்த ஆளுநர் யார்?
தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கான போட்டியில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் உர்ஜித் படேல், முன்னாள் துணை ஆளுநர் சுபிர் கோக்ரான், பொருளாதார வல்லுநர்கள் ராகேஷ் மோகன், பார்த்தசாரதி, உலக வங்கி தலைமை பொருளாதார வல்லுநர் கவுசிக் பாஸ் என பலரது பெயரும் அடிபட்டு கொண்டிருக்கிறது. இவர்களில் அரவிந்த் சுப்ரமணியன், அருந்ததி ஆகியோருக்கு கூடுதல் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ரகுராம் ராஜனின் சகா
தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன் படித்த அகமதாபாத் ஐஐஎம்-ல்தான் அரவிந்த் சுப்ரமணியனும் படித்தவர். அத்துடன் ரகுராம் ராஜன் பணியாற்றிய சர்வதேச நிதியத்தில்தான் அரவிந்த் சுப்ரமணியமும் பணிபுரிந்தவர். இருப்பினும் இறக்குமதி விவகாரத்தில் இருவரும் வெவ்வேறான கொள்கைகளைக் கொண்டவர்கள்.
அருந்ததி
அடுத்ததாக எஸ்.பி.ஐ. தலைவரான அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வங்கிகளின் தலைவர் ஒருவரை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமித்ததற்கான அண்மைக்கால முன்னுதாரங்கள் எதுவும் இல்லை. அத்துடன் வங்கித் துறையில் அருந்ததி பட்டாச்சார்யாவை விட சீனியர்கள் 4 பேர் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்களாகவும் இருக்கின்றனர். இதனால் அருந்ததியின் நியமனம் எவ்வளவு தூரம் சாத்தியமானது என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
உர்ஜித் படேல்
ரிசர் வங்கி துணை ஆளுநரான உர்ஜித் படேலுக்கு ஆளுநராக பதவி உயர்வு வழங்குவதற்கான வாய்ப்பிருப்பதகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
சக்திகாந்த தாஸ்
இப்படி நீளும் பட்டியலில் தமிழக ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக இருந்து வருகிறது. 1980-ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர்.
தற்போது மத்திய அரசுப் பணியில் இருக்கிறார். மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலராக பணியாற்றி வருகிறார்.