டிவிட்டர் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆள் பிடித்த வாலிபர்.. பெங்களூர் போலீஸ் குற்றப்பத்திரிகை!
பெங்களூர்: டிவிட்டர் மூலமாக, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக பெங்களூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாத ஆதரவாளர் மேதி மசூர் பிஸ்வாஸ் மீது 36 ஆயிரத்து 986 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகையில் மேதி பிஸ்வாஸ் @shammiwitness என்ற பெயரில் டிவிட்டரில் இயங்கியதற்கான ஆதாரங்கள், ஆவணங்களை போலீசார் இணைத்துள்ளனர்.
பெங்களூரில் கைது
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மேதி பிஸ்வாஸ், பெங்களூரில் தங்கியிருந்து, ஐடிசி உணவு தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக டிவிட்டரில் பரப்புரை மேற்கொள்வதாக, பிரிட்டீஷ் நியூஸ் சேனல் அம்பலப்படுத்தியது. இதையடுத்து பெங்களூர் போலீசார், கடந்தாண்டு டிசம்பர் 13ம் தேதி, மேதி பிஸ்வாஸ் தங்கியிருந்த வீட்டில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
36 ஆயிரம் பக்கம்
இந்நிலையில், 36 ஆயித்து 986 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை பெங்களூர் கோர்ட்டில் இன்று போலீசார் தாக்கல் செய்துள்ளனர். 124000, டிவிட்டுகளையும் ஆதாரமாக போலீசார் காண்பித்துள்ளனர். அவரது டிவிட்டர் அக்கவுண்ட் ரீடிவிட் செய்துள்ள டிவிட்டுகளில் என்ன அம்சங்கள் இருந்தன என்பதையும் காண்பித்துள்ளனர்.
பயங்கர வீடியோக்கள்
தீவிரவாதிகள், பிணையக் கைதிகள் தலையை வெட்டுவது போன்ற வீடியோக்களை அதிக அளவில் இவர் ஷேர் செய்துள்ளார். @ElSaltador என்ற பெயரிலும் ஒரு டிவிட் அக்கவுண்டை தொடங்கி அதிலும் விஷக்கருத்துக்களை பரப்பியுள்ளார். தீவிரவாதிகளின் கொள்கை தொடர்பாளர் போன்றே முழு நடவடிக்கையும் இருந்துள்ளது. இவர் இந்திய இளைஞர்களை மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகளின் இளைஞர்களையும் கவர தனது டிவிட்டர் அக்கவுண்டுகளை பயன்படுத்தியுள்ளார்.
கஷ்டப்பட்டு கைது
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த வழக்கு மிகுந்த சிரமம்மிக்கது என்று கூறினர். ஏனெனில், மேதி கைது செய்யப்படும்போது, இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு தடை விதிக்கவில்லை. மேலும், மேதியின் கருத்துக்கள் நேரடியாக இந்தியாவுக்கு எதிரானதாக இல்லை. எனவே இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத போர் தொடுத்த பிரிவின்கீழ் அவரை கைது செய்யாமல், இந்திய நேச நாடுகளுக்கு எதிராக போர் தொடுத்த பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடும் உழைப்பு
இந்த கைது நடவடிக்கைக்கு பிறகுதான், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் இந்தியாவில் பெருகுவதை உணர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம், அந்த தீவிரவாத இயக்கத்துக்கு தடை விதித்தது. அதன்பிறகுதான் வழக்கு வேகம் பிடித்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட டிவிட்டுகளை ஆராய்வது, வீடியோ, ஆடியோக்களை கேட்பது போன்றவற்றில், பெரும் நேர விரையமானது. இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு அனுமதி
சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின்கீழ், ஐஎஸ்ஐஎஸ் இந்தியாவில் தடைக்குள்ளாகியுள்ளதால், அதன் ஆதரவாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி அவசியம். கடந்த வாரமே பெங்களூர் போலீசார், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.