பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வின் சத்ருகன்சின்ஹா மனைவி ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டி?
பாட்னா: பாரதிய ஜனதாவின் எம்.பி.யான சத்ருகன்சின்ஹாவின் மனைவி பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பா.ஜ.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும், முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிப்பது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சத்ருகன்சின்ஹா கூறினார். இதுபற்றி கட்சி மேலிடம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மோடி, பீகாருக்கு தேர்தல் பிரசார கூட்டத்தில் பேச வந்தபோது அந்தக் கூட்டத்தை சத்ருகன் சின்ஹா புறக்கணித்தார். அன்றைய தினம் அவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அவர் சந்தித்து பேசினார்.
பின்னர் நிதிஷ்குமாரை புகழ்ந்து சத்ருகன்சின்ஹா பேட்டி அளித்தார். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்ருகன்சின்ஹாவை சமாதானப்படுத்துவதில் மேலிடம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இதனிடையே பீகார் சட்டசபை தேர்தலில் சத்ருகன்சின்ஹாவின் மனைவி பூனம்சின்கா ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நிதிஷ்குமார் - சத்ருகன் சின்ஹா சந்திப்பின்போது இதுபற்றி பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை ஐக்கிய ஜனதாதளம் உறுதிப்படுத்தவில்லை.