ஷீனா உயிருடன் தான் உள்ளார், அமெரிக்காவில் இருக்கிறார்: இந்திராணி புதுக்கதை
மும்பை: ஷீனா போரா உயிருடன் இருப்பதாகவும் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் அவரது தாய் இந்திராணி முகர்ஜி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது முதல் கணவர் சித்தார்த் தாஸுக்கு பிறந்த மகள் ஷீனா போராவை தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவின் உதவியுடன் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை செய்தார். மேலும் ஷீனாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இந்த வழக்கில் இந்திராணி, கன்னா ஆகியோர் கடந்த வாரம் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்திராணியின் முன்னாள் டிரைவர் ராய் குடிபோதையில் பாரில் ஷீனாவின் கொலை பற்றிய உளறியதால் தான் அவர் சிக்கினார்.
அமெரிக்கா
ஷீனா கொலை செய்யப்பட்ட பிறகு அவர் அமெரிக்கா சென்று அங்கு வசித்து வருவதாக இந்திராணி அனைவரிடமும் தெரிவித்து வந்துள்ளார். பீட்டர் முகர்ஜியின் மகனும், ஷீனாவின் காதலருமான ராகுலிடமும் இந்திராணி அவ்வாறு தான் தெரிவித்துள்ளார்.
ஷீனா
ஷீனா போராவை தான் கொலை செய்யவில்லை என்றும், அவர் உயிருடன் இருப்பதாகவும் இந்திராணி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் என்ன கேட்டாலும் இதையே அவர் திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.
வெறுப்பு
ஷீனா அமெரிக்காவில் உள்ளார். அவர் என் மீது உள்ள வெறுப்பால் தான் உயிருடன் இருக்கும் விவரத்தை தானாக முன்வந்து போலீசாரிடம் தெரிவிக்க மறுக்கிறார் என்று இந்திராணி விசாரணையின்போது கூறியுள்ளார்.
போலீசார்
ஷீனா போரா கொலை செய்யப்பட்ட நேரத்தில் மும்பையில் இருந்து அமெரிக்கா சென்ற பயணிகளின் பெயர் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
மண்டை ஓடு
ஷீனாவின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து மண்டை ஓடு ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். அது ஷீனாவின் மண்டை ஓடு என்று நம்பப்படுகிறது. மேலும் ஷீனாவின் உடலை எடுத்துச் சென்ற சூட்கேஸையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.