மாஜி கணவரோடு சேர்ந்து மகளை கொன்று, தீ வைத்து எரித்தேன்: இந்திராணி வாக்குமூலம்
மும்பை: மகளை கொலை செய்ததை காவல்துறையிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார் இந்திராணி.
ஸ்டார் டிவி முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டரின் மனைவியான இந்திராணி, முன்னாள் கணவருக்கு பிறந்த ஷீனா என்ற தனது மகளை 2012 ஏப்ரல் 24ம் தேதி கழுத்தை நெரித்து கொன்று, காட்டுப்பகுதியில் சடலத்தை வீசியுள்ளார்.
இவ்வழக்கில் மும்பை போலீசாரால் தற்போது இந்திராணி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மாஜி கணவர் சஞ்சீவ் கண்ணா நேற்று இரவு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், போலீசாரிடம் இந்திராணி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வாக்குமூலத்தில்,
"நானும் எனது கணவர் சஞ்சீவ் கண்ணாவும், சேர்ந்துதான், ஷீனாவின் கழுத்தை நெரித்து கொன்றோம். 2012 ஏப்ரல் 24ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. காரில் சடலத்தை வைத்துக்கொண்டு, ராய்காட் பகுதிக்கு கொண்டு சென்றோம். அங்கு, பெட்ரோலை ஊற்றி ஷீனாவின் உடலை எரித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
2012 மே 23ம் தேதி, ராய்காட் பகுதியில் உள்ளூர் காவல் துறையினர் எரிந்த நிலையில் கிடந்த எலும்பு மற்றும் மண்டை ஓடுகளை கண்டெடுத்தனர். ஆனால் யாரும் காணாமல் போனதாக வழக்கு பதிவாகாததால் அவர்களால் கொலையானது யார் என்பதை கண்டுபிடிக்கமுடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.