ஷீனா வழக்கு: இந்திராணியின் 3வது கணவரிடம் 12 மணிநேரம் துருவித் துருவி விசாரித்த போலீஸ்
மும்பை: ஷீனா கொலை வழக்கில் மும்பை போலீசார் இந்திராணியின் தற்போதைய கணவரான பீட்டர் முகர்ஜியிடம் 12 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணியின் தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜியிடம் மும்பை போலீசார் புதன்கிழமை விசாரணை நடத்தினர். பீட்டரிடம் 12 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்டமாக எழுத்துப்பூர்வமாகவும், இரண்டாவது கட்டமாக வாய் வார்த்தையாகவும் விசாரிக்கப்பட்டது.
பீட்டரை ஒரு அறையிலும், இந்திராணியை மறு அறையிலும் அமர வைத்து இருவரிடமும் 25 கேள்விகள் அடங்கிய வினாத்தாளை போலீசார் அளித்தனர். அந்த கேள்விகளுக்கு அவர்களுடைய பதில் ஒரே மாதிரியாக இருந்ததா என்று போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் பீட்டரிடம் பலவகையான கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர்.

பணம்
பீட்டரிடம் அவரின் பண பரிமாற்றங்கள், முதலீடுகள், பல்வேறு நிறுவனங்களில் அவருக்கு இருக்கும் பங்குகள், இந்திராணி, ராகுல், ஷீனா, விதிக்கு எவ்வளவு பணம் அளித்தார் என்பது குறித்து போலீசார் கேள்வி எழுப்பினர்.

ஷீனா
குடும்ப உறுப்பினர்கள் குறித்து பீட்டரிடம் கேட்கப்பட்டது. மேலும் ஷீனாவை யார், எதற்காக கொலை செய்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

காதல்
உங்களின் மகன் ராகுல் முகர்ஜி ஷீனாவை காதலித்த விஷயம் தெரிய வந்தபோது என்ன செய்தீர்கள், ஷீனா திடீர் என மாயமானபோது உங்களுக்கு சந்தேகமே வரவில்லையா என்று போலீசார் பீட்டரிடம் கேட்டனர்.

இந்திராணி
நீங்கள் இந்திராணியின் மூன்றாவது கணவர் என்பது உங்களுக்கு தெரியுமா? ஷீனா இந்திராணியின் தங்கை அல்ல மகள் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? சித்தார்த் தாஸ் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளதை இந்திராணி உங்களிடம் தெரிவித்தாரா? கொலை நடந்த சமயம் நீங்கள் எங்கிருந்தீர்கள் என போலீசார் பீட்டரிடம் கேள்வி கேட்டனர். போலீசார் பீட்டரிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications