பீகார் சட்டசபை தேர்தல்: 150 இடங்களில் தனித்துப் போட்டி- சிவசேனா அதிரடி அறிவிப்பு!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா அதிரடியாக அறிவித்துள்ளது.
பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது.
பீகாரில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற துடிக்கும் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி மற்றும் அவாமி மோர்ச்சா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த இரு கூட்டணிகளிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சமாஜ்வாடி கட்சி, தொகுதிப் பங்கீட்டு பிரச்சனையால் தனி அணி அமைத்து களமிறங்கியுள்ளது. அதேபோல் பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சிவசேனா, திடீரென பீகார் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கூறுகையில், சிவசேனா கட்சி பீகாரிகளுக்கு எதிரானது என்ற முத்திரை குத்தப்படுகிறது. அதை உடைக்கவே பீகார் தேர்தலில் களமிறங்கியுள்ளோம். மகாராஷ்டிராவில் பீகாரிகள் மீது சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தியது இல்லை.
இந்துத்துவா, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை முன்வைத்து பீகார் தேர்தலில் போட்டியிடுகிறோம். இந்தி பேசும் மாநிலங்களில் எங்கள் பலத்தை வலுப்படுத்த விரும்புகிறோம். மொத்தம் 150 இடங்களில் போட்டியிட உள்ளோம் என்றார்.
சமாஜ்வாடி மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு பீகாரில் செல்வாக்கு இல்லாத நிலையிலும் தேர்தலில் தனித்து களம் இறங்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications