உச்சகட்ட மல்லுகட்டு...பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணியை விட்டு வெளியேறப் போவதாக சிவசேனா மிரட்டல்!!
மும்பை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மிரட்டல் விடுத்துள்ளார். அதே நேரத்தில் மகாராஷ்டிரா முதல்வரான பா.ஜ.க.வின் பட்னாவிஸோ, சிவசேனாவின் இந்த நாடகத்தை நாங்கள் சமாளித்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் சிவசேனா இடம்பெற்றுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வின் பட்னாவிஸ் அரசுக்கும் சிவசேனா ஆதரவு தெரிவித்து ஆட்சியில் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் மகாராஷ்டிராவின் கல்யான் டோம்பிவில் நகராட்சித் தேர்தலை முன்வைத்து இரு கட்சிகளும் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர். இத்தேர்தலில் 2 கட்சிகளுமே தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க முனைப்பு காட்டுவதால் முட்டல் மோதல் உக்கிரமடைந்துள்ளது.
இதன் உச்சகட்டமாக மகாராஷ்டிராவின் சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் இதை முதல்வர் பட்னாவிஸோ நாடகம் என்று விமர்சித்தார்.
இதில் கடும் அதிருப்தி அடைந்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பா.ஜ.க.வின் இந்த அகம்பாவம் தொடர்ந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதையும் எதிர்கொள்ள தயார் என்று சளைக்காமல் பட்னாவிஸ் கூறி வருகிறார்.
இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications