சும்மா கெடு விதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்துங்க.. சிவசேனாவுக்கு பாஜக பதிலடி
மும்பை: மகாராஷ்டிரா அரசில் பங்கேற்பது குறித்து கெடு விதித்துக் கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிவசேனாவுக்கு பாரதிய ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைந்துள்ள நிலையில் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
அதே நேரத்தில் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிவசேனா, மகாராஷ்டிரா பாஜக அரசில் பங்கேற்குமா? இல்லையா என்பது தொடர்ந்து கேள்விக் குறியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தேசியவாத காங்கிரஸின் ஆதரவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாஜக பெறக் கூடாது; அப்படிப் பெற்றால் சிவசேனா எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் ஜிவிஎல் நரசிம்ஹ ராவ், சிவசேனா கட்சி கெடு விதித்துக் கொண்டிருக்காமல், பாஜக மேலிடத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக்சிங் மனு சிங்வி கூறுகையில், மகாராஷ்டிராவில் பதவி ஏற்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டிருக்க வேண்டும் என்றார்,
மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான ரஷீத் ஆல்வி, சிவசேனாவின் நிலைப்பாட்டை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மஜித் மேனனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications