ம.பியில் மூன்றாவது முறையாக முதல்வராகும் 'மாமா'!
போபால்: மத்தியப் பிரதேசத்தில் மூன்றாவது முறையாக முதல்வராகிறார் சிவராஜ் சிங் செளகான்.. மாமா என்று பாஜகவினரால் செல்லமாக அழைக்கப்படும் செளகானின் வெற்றியை பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாட்ரிக் ஆட்சியை அது அமைக்கிறது.
ராஜஸ்தானைப் போலவே மத்தியப் பிரதேசத்திலும் பெரும் வெற்றியை பாஜக ஈட்டியிருப்பதால் அக்கட்சி பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக செளகான் ஆதரவாளர்கள் பெரும் குஷியடைந்துள்ளனர்.

3வது முறை முதல்வர்
மத்தியப் பிரதேச முதல்வராக செளகான் 3வது முறையாக பொறுப்பேற்கவுள்ளார்.

மோடியின் கடும் போட்டியாளர்
கட்சியினரால் செல்லமாக மாமா என்று அழைக்கப்படும் 54 வயது செளகான், நரேந்திர மோடியின் கடும் போட்டியாளராக பார்க்கப்படுவர். மோடிக்கு எதிராக செளகானை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவும் கூட பலர் முயற்சித்தனர்.

சிறந்த நிர்வாகி
மோடியை விடவும் சிறந்த நிர்வாகி செளகான் என்று மத்தியப் பிரதேசத்தில் கூறுகிறார்கள். வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுபவர் செளகான்.

மதச்சார்பில்லாதவர்
மதச்சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை உள்ளவர். மதவாதியாக தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பாதவரும் கூட.

அடக்கம், அமைதி
ஆர்ப்பாட்டமில்லாமல் செயல்படக் கூடியவர் செளகான். மோடிக்கு எதிராக இவரை நிறுத்த அத்வானி தரப்பு முயன்றபோதும் கூட இவர் முன்வரவில்லை. மாறாக மோடிக்கு ஆதரவு தெரிவித்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியவர்.

சொந்த செல்வாக்கால் கட்சியை கரை சேர்த்தார்
இவரது அமைச்சர்களில் 13 பேர் மீது ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. ஆனால் செளகான் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும், அன்பும்தான் இன்று பாஜகவை மத்தியப் பிரதேசத்தில் கரை சேர்த்துள்ளதாக கூறுகிறார்கள்.

2005 முதல்
2005ம் ஆண்டு முதல் மத்தியப் பிரதேச முதல்வராக இருந்து வருகிறார் செளகான். மேலும் விதிஷா லோக்சபா தொகுதியிலிருந்து 5 முறை நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.












Click it and Unblock the Notifications