பயங்கரம்.. குஜராத்தில் 91 பேரின் உயிரை குடித்த ஆறு.. சட்டென அறுந்து விழுந்த கேபிள் பாலத்தால் சோகம்
காந்திநகர்: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் இன்று மாலை கேபிள் பாலம் அறுந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் ஆற்றில் சிக்கிய உயிருக்கு போராடிய 100 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் 91 பேர் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் உள்ளது. அங்குள்ள மச்சு ஆற்றின் குறுக்காக மக்கள் பயன்பாட்டுக்காக இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாலம் சமீபத்தில் பழுதடைந்து இருந்தது.
இதையடுத்து பாலம் புரனமைப்பு பணி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த புனரமைப்பு பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இந்த புனரமைப்பு பணி சமீபத்தில் நடந்தது.

அறுந்து விழுந்த கேபிள் பாலம்
இதற்கிடையே தான் குஜராத் புத்தாண்டு கடந்த 26ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த புத்தாண்டின்போது மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. இன்று கேபிள் பாலத்தில் சுமார் 500 பேர் நின்றனர். அப்போது திடீரென்று கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. இதில் கேபிள் பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். பலர் நீச்சலடித்து வெளியே வந்தனர்.

தண்ணீரில் தத்தளித்த மக்கள்
இருப்பினும் ஏராளமானவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்தவுடன் அக்கம்பக்கத்து பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் என அனைவரும் திரண்டு வந்து ஆற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 100 பேர் ஆற்றுக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக தொடங்கியது.

பிரதமர் மோடி உத்தரவு
பிரதமர் மோடி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கேபிள் பாலம் அறுந்து விழுந்தது பற்றி அறிந்த அவர் மீட்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதனால் மாநில பேரிடர் மீட்பு படையினரும், தேசிய மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களும் மீட்பு பணியை துவங்கி உள்ளனர். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மீட்பு பணியை தீவிரப்படுத்த தேசிய மீட்பு படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

91 பேர் பலி
இந்நிலையில் தான் இரவு 9 மணி நிலவரப்படி மொத்தம் 91 பேர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்ட செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இன்னும் சிலர் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை என்பது இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

இழப்பீடு அறிவிப்பு
இதற்கிடையே தான் கேபிள் பாலம் அறுந்து விழுந்து உயிரிழந்த நபர்களின் குடும்பத்துக்கு குஜராத் மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. அதன்படி பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடாகவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேபிள் பாலம் அறுந்து விழுந்து மொத்தம் 32 பேர் இறந்த சம்பவம் குஜராத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications