வீட்டில் பார்த்த பையனை ஏற்க மறுத்த மகள்.. போலீசார் கண் முன்னே சுட்டுக்கொலை செய்த தந்தை! ஷாக் சம்பவம்
இம்பால்: வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடியாது என்று கூறிய 20 வயது இளம்பெண்ணை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூர சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு 4 நாள்கள் முன்பாக மகளை போலீசார் கண் முன்னே சுட்டுக்கொலை செய்து இருக்கிறார் கொடூர தந்தை திடுக்கிட வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலம் கவாலியர் அருகே உள்ல கோலா கா மந்திர் பகுதியில் பெற்ற மகளையே தந்தை சுட்டுக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- கவாலியரை சேர்ந்த 20 வயதான தனு கர்ஜாருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

திருமண வரன் பார்த்து கல்யாண ஏற்பாடுகளையும் பெற்றோர்கள் முழு வீச்சில் செய்து வந்துள்ளனர். ஆனால் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை தனக்கு பிடிக்கவில்லை எனவும் வேறு ஒரு நபரை தான் விரும்புவதாகவும் தனு கர்ஜார் தனது தந்தை மகேஷ் கர்ஜாரிடம் கூறியிருக்கிறார். ஆனால், இதனை ஏற்க குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதனால், விரக்தி அடைந்த தனு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார்.
அதில், தன்னை வீட்டில் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் தனக்கு ஏதாவது நேர்ந்தால் என் தந்தையும் பிற உறவினர்களுமே பொறுப்பு.. என்னை வீட்டில் வைத்து தினமும் அடித்து துன்புறுத்துகிறார்கள். நான் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விக்கி என்பவரையே திருமணம் செய்ய விரும்புகிறேன்" என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்து ஆத்திரம் அடைந்த தனுவின் தந்தை பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். தனுவின் உறவினர் ராகுலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார். முன்னதாக தனு வெளியிட்ட வீடியோ வைரல் ஆனதும், போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பேசியுள்ளனர். தனுவின் பெற்றோரை அழைத்து இரு தரப்பினரிடம் பேசியுள்ளனர். உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்களும் பேசி பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முயற்சித்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது தான் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்று தனு கூறியுள்ளார். மேலும் தன்னை மகளிர் பாதுகாப்பு அமைப்பான ஒன் ஸ்டாப் செண்டருக்கு அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார். எனினும் தனுவின் தந்தை, தனது மகளிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி அழைத்துள்ளார். அதன்பிறகு தான் துப்பாக்கியால் சுட்டு தனது மகளை கொலை செய்து இருக்கிறார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே தனு உயிரிழந்தார். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் அங்கிருந்த போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர்களையும் சுட்டு விடுவதாக மகேஷ் மிரட்டியுள்ளார். எனினும், போலீசார் அவரை லாவகமாக மடக்கி பிடித்தனர். அதேவேளையில், ராகுல் தப்பி ஓடினார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications