திருமணத்திற்கு மறுத்த தோழியை 30 முறை கத்தரியால் குத்திக் கொன்ற டெல்லி வாலிபர் கைது
டெல்லி: தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை கத்திரிகோலால் 30 முறை குத்தி கொலை செய்த வாலிபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு டெல்லியின் ஓக்லா பகுதியை சேர்ந்த அனீஷ் (வயது 39), அதே பகுத்யில் உள்ள பால்ஜீத் கவுர் (வயது 23) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், கவுர் அனீஷிடம் நட்பாக பழகி வந்ததாகச் சொல்லப் படுகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கவுரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கவுர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும், அனீஷின் வீட்டில் இருந்து கவுரின் உடலை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து நடத்திய தேடுதல்வேட்டையில் தலைமறைவான அனீஷைக் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அனீஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது:-
கடந்த 23ம் தேதி அனீஷ் தனது வீட்டுக்கு கவுரை அழைத்து வந்துள்ளார். அப்போது தனது காதல் குறித்து கவுரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுர், ‘உங்களுக்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளது' என்று கூறி திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
ஆனால் அனீஷ் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட மிகவும் கோபமாக இருந்த அனீஷ், கவுரை கத்திரிகோலால் 30 முறை குத்தியுள்ளார். இதில் கவுர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அனீஷ் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார் என தெரிய வந்துள்ளது.
தற்போது கைது செய்யப் பட்டுள்ள அனீஷிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications