அகிலேஷ் யாதவுக்கு பிரதீக் சிங் தம்பிதான்.. ஆனால் தந்தை முலாயம் சிங் கிடையாது! திடுக் தகவல்
லக்னோ: முலாயம்சிங்கின் ஒரே ரத்த வாரிசு அகிலேஷ் யாதவ்தான் என்றும், பிரதீக் சிங் வேறு ஒரு தந்தைக்கு பிறந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சமாஜ்வாதி தேசிய தலைவர் முலாயம் சிங்கின் முதல் மனைவி மால்தி தேவி. இத்தம்பதியின் மகன்தான் அகிலேஷ் யாதவ். கடந்த 2003ல் மால்தி தேவி காலமானார்.
இதன்பிறகு, சாத்னா குப்தா என்று தனக்கு ஒரு மனைவி இருப்பதாகவும், அவருக்கு பிரதீக் சிங் என்ற மகன் இருப்பதாகவும், முலாயம்சிங் வெளிப்படையாக அறிவித்தார்.
2007ம் ஆண்டில் தனது வருவாய் குறித்து உச்ச நீதிமன்றத்தில் முலாயம் தாக்கல் செய்த மனுவில் சாத்னா குப்தாவை மனைவி என்று முதல் முறையாக குறிப்பிட்டார்.
சமாஜ்வாதியின் அடிப்படை உறுப்பினராக இருந்த சாத்னா குப்தா 1980ல் முலாயம் சிங்கிற்கு அறிமுகமானார். 1988ல் அவர்களுக்கு பிரதீக் சிங் என்ற மகன் பிறந்தார் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால், சந்திரபிரகாஷ் குப்தா என்பவரை 1986 ஜூலை 4ம் தேதி சாத்னா குப்தா திருமணம் செய்திருந்ததாகவும், அந்த கணவருக்கு பிறந்த மகன்தான் பிரதீக் என்றும் 'இந்தியா சம்வாத்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிபிஐ அறிக்கையொன்றை ஆதாரமாக கொண்டு அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முலாயம்சிங்கின் ஒரே ரத்த வாரிசு அகிலேஷ் யாதவ்தான் என்று அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இது உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர அரசியலில் குதிக்க பிரதீக் திட்டமிட்டிருந்த நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.