பெண் ஊழியரின் சேலையைப் பிடித்து இழுத்து தரக்குறைவாக நடந்த அதிகாரி.. பரபரப்பு வீடியோ
ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெண் ஊழியரின் சேலையை அதிகாரி ஒருவர் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
டெல்லி: ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெண் ஊழியரின் சேலையை பிடித்து இழுத்து தரக்குறைவாக நடந்த அதிகாரி குறித்து புகார் அளித்தும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் புகார் அளித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெண் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி விமான நிலையம் அருகில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்த 29ம் தேதி பெண் ஊழியர் ஒருவரிடம் அவரது உயர் அதிகாரி தரக்குறைவாக நடந்துள்ளார்.
ஓட்டலின் பாதுகாப்பு மேலாளராக இருக்கும் அந்த நபர் தனக்கு கீழ் பணியாற்றும் பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து தன்னுடன் இரவு தங்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
பிறந்த நாளில் நடந்த அவமானம்
இந்த சம்பவம் குறித்து விவரித்துள்ள பாதிக்கப்பட்ட 33 வயது இளம்பெண், "அன்றைய தினம் என்னுடைய பிறந்தநாள், என்னை அவரின் அறைக்கு அழைத்த என்னுடைய பாஸ் கிரெடிட் கார்டை எடுத்து நீட்டி என்ன பரிசு வேண்டுமோ வாங்கிக்கொள் என்று கூறினார். என்னை அவருக்கு அருகில் அமரச்சொன்னார்.
தரக்குறைவாக நடந்த அதிகாரி
நான் மறுக்கவே, அவர் என்னுடைய சேலையை பிடித்து இழுத்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அந்த அறையில் இருந்த மற்றொரு ஆண் பணியாளரையும் அறையை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டதோடு இரவு என்னை அவருடன் தங்கவும் வலியுறுத்தினார்.
பணிநீக்கிய நிர்வாகம்
இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்தின் எச்.ஆரிடம் புகார் அளித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டேன். அடுத்த நாள் பணிக்கு வந்த போது என்னை எச். ஆரை சந்திக்கச் சொன்னார்கள். 45 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்ட பின்னர் என்னை பணிநீக்கம் செய்துவிட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
போலீசில் புகார்
இதனிடையே அதிகாரி என்னிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் சிசிடிவி காட்சிகள் நண்பர் மூலம் கிடைத்தது. இதன் அடிப்படையில் என்னுடைய கணவர் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளேன். போலீசில் புகார் அளித்த பின்னர் அந்த அதிகாரியை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.
பெண் ஊழியர்கள் அதிர்ச்சி
பாலியல் தொந்தரவு கொடுத்து தரக்குறைவாக நடந்தது குறித்து புகார் தெரிவித்ததற்காக பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சக பணியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.