சித்தராமையாவுக்கு அணிவித்த மாலையில் பேட்டரி, பல்புகள்! உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அக்கட்சியை சேர்ந்த ஒருவர் அணிவித்த மாலையில், சென்சார் லைட் மற்றும் பேட்டரி இருந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையளிக்க பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அலுவலகம் தலைமைச் செயலகமான விதானசவுதாவின் மூன்றாவது மாடியிலுள்ளது.

நேற்று சித்தராமையாவை சந்திக்க வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மேயர் ஒருவர், சித்தராமையாவுக்கு மாலை அணிவித்துள்ளார். இந்த பிறகுதான், எதேர்ச்சையாக சித்தராமையா, பூ மாலையை கவனிக்கும்போது, அதில் சென்சார் விளக்கு மற்றும் அதை இயக்குவதற்காக பேட்டரி பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக மாலையை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். மேலும், பாதுகாப்பு அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். தகவல் அறிந்த பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, பெங்களூர் நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரனை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஹரிசேகரன் கூறுகையில், "விசாரணை நடத்தி கமிஷனரிடம் அறிக்கையளிக்கப்படும்" என்றார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்திக்க மூன்றடுக்கு பாதுகாப்பு அமைப்பு உள்ளது. முதல்கட்டமாக மெட்டல் டிடெக்டர் சோதனையும், இரண்டவது கட்டமாக ஸ்கேனிங் சோதனையும், முதல்வர் அறைக்குள் செல்வதற்கு முன்பாக மீண்டும் மெட்டல் டிடெக்டர் சோதனையும் நடத்தப்படும். ஆனால், மூன்று கட்ட சோதனையையும் தாண்டி பேட்டரி மற்றும் பல்பு முதல்வர் அறையை சென்றடைய, பாதுகாப்பு போலீசாரின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, 2 முறை, சித்தராமையா பயணிக்கும் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறுகள் கடைசி நிமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பயணங்கள் ரத்தாகிய சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது தலைமைச் செயலகத்திலேயே பேட்டரி மற்றும் பல்பு அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications