ஐஏஎஸ் அதிகாரி சாவு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சித்தராமையா மறுப்பு! எதிர்க்கட்சிகள் தர்ணா
பெங்களூரு: ஐஏஎஸ் அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு ஒப்படைக்க கர்நாடக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வலியுறுத்தியும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த முதல்வர் சித்தராமையா, வழக்கை மாநில சிஐடி போலீசார்தான் விசாரிப்பார்கள் என்று அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டன.
கர்நாடக வணிக வரி துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றிய டி.கே.ரவி, பெங்களூருவிலுள்ள அவரது வீட்டில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வீட்டு மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதனிடையே, சம்பவ இடத்தை பார்வையிட்ட பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, ரவி தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து, இன்று சட்டசபை கூடியதும், இப்பிரச்சினையை, எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் மஜத கையில் எடுத்தன. விவாதத்தில் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக ) முன்னாள் முதல்வர் குமாரசாமி (மஜத), முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்குமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டனர்.
உயிரிழந்தது ஐஏஎஸ் அதிகாரி என்பதால் மத்திய புலனாய்வு விசாரணை அமைப்பு இதை விசாரிக்க வேண்டும் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வரும் முன்பே, பெங்களூரு போலீஸ் கமிஷனர், இது ஒரு தற்கொலை என்று கூறியதன் பின்னணியில் சதி இருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
பல சாதனைகளை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரவி, தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்றும், ஒருவேளை அவர் தற்கொலை செய்திருந்தாலும், அதை தூண்டிய மாஃபியாக்கள் யார் என்பதை கண்டறியவாவது சிபிஐ விசாரணைக்கு, கர்நாடக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
சமீபகாலமாக, ரவி தலைமையில், மிகப்பெரிய நிறுவனங்களில் ரெய்டுகளை நடத்தி, வணிக வரித்துறை, பல கோடி வரி பாக்கிகளை வசூலித்ததை சுட்டிக் காட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வரி ஏய்ப்பு செய்த ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள்தான் ரவியை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகம் வெளிப்படுத்தினர். எனவே மாநில அரசின் கீழ் உள்ள காவல்துறை விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் சிபிஐ விசாரித்தால்தான், பிற அதிகாரிகள் நிம்மதியாக வேலை பார்க்க முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சிகள் கருத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் "போலீஸ் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவல்படி, ரவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இன்னும் 15 நாட்கள் அரசுக்கு அவகாசம் கொடுங்கள். அதன்பிறகும் விசாரணையில் திருப்தியில்லாவிட்டால், உங்கள் கோரிக்கையை வலியுறுத்துங்கள். அதுவரை கர்நாடக போலீஸ்தான் இதை விசாரிக்கும்" என்றார்.
முதல்வர் சித்தராமையா கூறுகையில், "ரவியின் மாமனார் எனக்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ் கட்சிக்காரரும்கூட. அவர் கேட்டுக் கொண்டதால்தான், நான் ரவிக்கு பெங்களூருக்கு டிரான்ஸ்பர் வாங்கி கொடுத்தேன். எனவே தனிப்பட்ட முறையிலும் எனக்கு இந்த வழக்கின் மீது அக்கறை உள்ளது. போலீசாருக்கு கிடைத்துள்ள சில தகவல்களை அம்பலப்படுத்த முடியாது. எனவே பொறுத்திருங்கள். விரைவில், இந்த சாவுக்கான காரணம் என்ன என்பதை ஆதாரத்தோடு இந்த அரசு வெளிப்படுத்தும்" என்றார்.
ஆனால், முதல்வர் பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சிகள், கர்நாடக அரசு, மாஃபியாக்களுக்கு பயந்து, இந்த வழக்கை மூட முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி, சபாநாயகர் இருக்கையின் முன்பு நின்று (வெல் பகுதி) தர்ணாவில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகள், அரசியல் காரணங்களுக்கா போராட்டம் செய்வதாக காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷமிட்டனர். இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மதிய உணவு இடைவேளைக்கு அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் காக்கோடு திம்மப்பா.
முன்னதாக, ரவியின் உடலுக்கு முதல்வர் சித்தராமையா நேரில் அஞ்சலி செலுத்தினார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications