பொற்கோவிலில் நடந்த வன்முறைத் தாக்குதல் வருத்தமளிக்கிறது... சீக்கிய தலைவர்கள் வேதனை
அமிர்தசரஸ்: சீக்கியர்களின் புனித தளமான அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடந்து முடிந்த 30-ம் வருட நினைவு நாளில் இரு கோஷ்டிகள் கலவரத்தில் ஈடுபட்டு வன்முறைத் தாக்குதலில் இறங்கியது மிகவும் வருத்ததுக்கு உரிய செயலாகும் என சிரோமணி அகாலி தள தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை அப்புறப்படுத்த இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் புளூஸ்டாரில் சீக்கியர்கள் பலர் பலியானார்கள். இதனை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிக்ழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு அமிர்தசரஸ் பொற்கோவிலில் ‘ஆபரேஷன் புளூஸ்டாரின் 30-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பொற்கோவில் வளாகத்தில் இரு பிரிவினருக்கு இடையே திடீர் மோதல் உண்டானது. இதில் சம்பவ இடத்தில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கிய இந்த சம்பவம் குறித்து சிரோமணி அகாலி தளத்தின் செய்தி தொடர்பாளர் பிரேம் சிங் சந்துமஜ்ரா டெல்லியில்செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
சீக்கியர்களின் புனிததலமான அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடந்து முடிந்த 30-ம் வருட நினைவு நாளில் இரு கோஷ்டிகள் கலவரத்தில் ஈடுபட்டு வன்முறைத் தாக்குதலில் இறங்கியது மிகவும் வருத்ததுக்கு உரிய செயலாகும். இந்த சம்பவம் சீக்கியர்கள் அனைவருக்கும் மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்படுவார்கள்.
மேலும், இந்த நாட்டில் நடைபெறும் சிறு சிறு சம்பவங்கள் கூட நாடாளுமன்றத்தில் பெருத்த கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான மதக்கலவரத்தில் உயிரிழந்த அப்பாவிகளின் மரணத்துக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்து இருக்க வேண்டும்' என அவர் கண்டனம் தெரிவித்தார்.