பீகார் பிளானை கையில் எடுக்கும் காங்கிரஸ்! ராஜஸ்தானில் சாதி வாரி கணக்கெடுப்பு! பறந்த பரபர அறிவிப்பு
ஜெயப்பூர்: விரைவில் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்திலும் பீகாரைப் போலவே சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். அப்போது தான் மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க முடியும் என்பது இவர்கள் வாதம்.

இதற்கிடையே பீகாரில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவது குறித்த அறிவிப்பை அங்குள்ள ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு வெளியிட்டது. இதற்கு எதிராகப் பல வழக்குகள் தொடரப்பட்ட போதிலும், இதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பீகார் அரசு: இதையடுத்து சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி பீகார் அரசு, அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடியாக இருக்கிறது. அதில் 63.14% பேர் பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். அதாவது 27.13% பிசி பிரிவையும் 36.01% ஓபிசி பிரிவையும் சேர்ந்தவர்களாக உள்ளனர். 15.52% பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் 19.65%. பேர் தாழ்த்தப்பட்ட மக்களாகவும் 1.69% பழங்குடி இன மக்களாகவும் உள்ளது அதில் தெரிய வந்தது.
இந்த சாதி வாரி கணக்கெடுப்பிற்குப் பிறகு நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் இதேபோல சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் இதை முன்வைத்தே பேசி வருகின்றனர். இதனிடையே பீகாரில் நடத்தப்பட்டது போலவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ராஜஸ்தானிலும் நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார்.
அசோக் கெலாட்: நேற்றிரவு ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வார் ரூமில் ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் கோர் கமிட்டி கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, முதல்வர் கெலாட் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "பீகாரில் நடத்தப்பட்டது போன்ற சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ராஜஸ்தான் அரசும் நடத்தும். ராகுல் காந்தி நாடு முழுக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். அப்போது தான் மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க முடியும்.
சாதி வாரியான கணக்கெடுப்பு: அதன் அடிப்படையில் ராஜஸ்தானிலும் சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மாநிலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நமது நாட்டில் பல்வேறு சாதிகள் உள்ளன.. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். பல சாதியினர் இங்கே பல வேலைகளைச் செய்கிறார்கள்.
மக்கள்தொகையில் எந்தெந்த சாதியினர் எத்தனை பேர் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்காக என்னென்ன திட்டங்களைக் கொண்டு வரலாம் என்பது குறித்து முடிவெடுக்க முடியும். அப்போதுதான் மக்கள் முன்னேற்றத்திற்குத் திட்டங்களைத் தயாரிப்பதில் எங்களுக்கு எளிதாக இருக்கும்'' என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications