ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த தே.ஆ ரெடி.. மோடிக்கு சாதகம்??
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் 2014 ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2019 மே மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும்.
இதன்படி நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. ஆனால் லோக் சபா தேர்தலையும் நாடு முழுவதும் சட்ட சபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு ஆலோசித்துள்ளது.
தேர்தல் செலவைக் குறைக்க திட்டம்
தேர்தல்களுக்கான செலவைக் குறைக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
தயாராகும் மத்திய அரசு
அப்போது லோக் சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த என்ன செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டதாக தெரிவித்தார்.
2018ஆம் செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அரசின் கையில் தான் உள்ளது
ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்டத்திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றார். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான முடிவை எடுப்பது மத்திய அரசின் கையில் தான் உள்ளது என்றும் ஓபி ராவத் கூறினார்.
40 புதிய எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது
அண்மையில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த இடங்களில் காகித வாக்குப்பதிவு முறையை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது என்றார். மேலும் மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கு ஒதுக்கிய நிதியில் 40 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்கள் புதிததாக வாங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சின்னத்துடன் துண்டுச்சீட்டு
இந்த பேப்பர் டிரெயில் மெஷின்கள் வாக்காளர் வாக்களித்தவுட்ன் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற சின்னத்துடன் துண்டுச்சீட்டை வழங்கும் என்றார். ஆனால் அந்த துண்டுச்சீட்டுகளை வாக்காளர் வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும் அங்குள்ள பெட்டியில் போட்டு செல்ல வேண்டும் என்றும் ராவத் கூறினார்.
இடையூறுகளை சரிக்கட்ட
மேலும் இந்த முறை சில தேர்தல்களில் சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்களால் ஏற்படும் இடையூறுகளை சரிக்கட்டும் வகையில் இந்த பேப்பர் டிரெய்ல் மெஷின்களை பயன்படுத்த பல்வேறு கட்சிகள் அழுத்தம் கொடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.
காகித வாக்குப்பதிவுக்கு திரும்புங்கள்
காகித வாக்குப்பதிவு முறைக்கு திரும்புமாறு 16 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இணைய அடிப்படையில் தேர்தல் பதிவு அலுவலர் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படுவர்கள் என்றும் ராவத் தெரிவித்தார்.
போலியை கண்டுபிடிக்கலாம்
ஆன்லைன் மூலம் வாக்களிக்க இந்த வசதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த நெட்வொர்க் மலம் போலி வாக்காளர்களின் வாக்குப்பதிவை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் கூறினார். இதனால் பூத் அதிகாரிகள் ஒவ்வொரு பூத்தையும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
ஏழை நாடு எப்படி தாங்கமுடியும்?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதன் மூலம் செலவை கட்டுப்படுத்த முடியும் என்றார். 2009 லோக் சபா தேர்தலில் ரூ. 1,100 கோடி செலவழிக்கப்பட்டது என்றும் 2014 இல் ரூ4,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும் கூறிய மோடி இது போன்ற பாரத்தை நம்மைப் போன்ற ஏழை நாடு எப்படி தாங்கமுடியும் என கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.