ஷாருக், ஆமீர் சொந்த கருத்து.. இந்தியாவில் சகிப்புத்தன்மை உள்ளது: இந்தியரான பாக். பாடகர் பெருமிதம்
டெல்லி: பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரபல ஹிந்தி திரைப்பட பாடகர் அட்னன் சமிக்கு இந்தய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சகிப்புத்தன்மை இருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரபல ஹிந்தி திரைப்பட பாடகர் அட்னன் சமி கடந்த 2001ம் ஆண்டு ஒரு ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்தார்.
இவர் தொடர்ந்து தன் விசாவை புதுப்பித்து இந்தியாவில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானால் வழங்கப்பட்ட இவரது பாஸ்போர்ட் காலாவதியானது.
இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க பாகிஸ்தான் அரசு மறுத்தது. இதையடுத்து பாடகர் அட்னன் சமி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என பல்வேறு கட்சிகள் கூறிவந்தன.

குடியுரிமை
இந்தநிலையில் தனக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என பாடகர் அட்னன் சமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தற்போது மத்திய அரசு இந்திய குடியுரிமையை அட்னன் சமிக்கு வழங்கி உள்ளது.

லாகூர்வாசி
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "அட்னன் சமி வெள்ளிக்கிழமை முதல் இந்தியக் குடிமகன் ஆவார்' என்றனர். 46 வயதாகும் அட்னன் சமி, பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர் ஆவார்.

பாடல்கள்
கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியா வந்து அட்னன் சமி பாடிய "கபி தோ நஜர் மிலாவ்', "லிப்ட் கரா தே' ஆகிய 2 பாடல்களும் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தன. அதேபோல், ஹிந்தி நடிகர் சல்மான் கான் நடிப்பில் அண்மையில் வெளியான "பஜ்ரங்கீ பைஜான்' படத்திலும் அவர் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

சகிப்புத்தன்மை
ஷாருக்கான், ஆமீர்கான் போன்றோர் சகிப்புத்தன்மை இல்லை என்பதாக பேசியது குறித்து நிருபர்கள் அட்னந் சமியிடம் கேட்டபோது, இந்தியாவில் சகிப்புத்தன்மை இருப்பதாகவும், தான் என்றுமே சகிப்பின்மையை எதிர்கொண்டதில்லை என்றும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், எனக்கு சகிப்பின்மை போன்ற நிகழ்வு நடந்திருந்தால், நான் இந்திய குடியுரிமையே பெற்றிருக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications