வன்முறையால் பற்றி எரிந்த லடாக்.. 2024லே எச்சரித்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்.. பின்னணி?
லடாக்: லடாக்கை தனி மாநிலமாக்க வேண்டும் என்று கூறி நேற்று நடந்த இளைஞர்களின் முழு அடைப்பு போராட்டம் வன்முறையானது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் வாகனம், பாஜக அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. வன்முறையில் 4 பேர் பலியாகினர். 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் தான் லடாக்கில் வன்முறை வெடிக்கும் என்று கடந்த 2024ம் ஆண்டிலேயே காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் எச்சரித்த வீடியோ வெளியாகி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதோடு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் எனவும், லடாக் என்றும் 2 யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக்கை மாநிலமாக்க தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இன்னும் மாநிலமாக்கவில்லை.

லடாக்கை எடுத்து கொண்டால் அரசியலமைப்பு அட்டவணை 6ன்படி வடகிழக்கு மாநிலங்களை போல் சுயாட்சி நடத்தும் வகையில் தனி மாநிலமாக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இதனை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 10ம் தேதி முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்பட 15 பேர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் 2 பேர் மயங்கினர். மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தான் நேற்று லடாக்கில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. Leh Apex Body இளைஞர் பிரிவை சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இது வன்முறையானது. போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்கள், லே பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். தற்போது வன்முறை கட்டுக்குள் வந்துள்ளது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மத்திய அரசு அலட்சியம் காட்டினால் லடாக்கின் நிலைமை மோசமாகி விடும் என்று கடந்த 2024ம் ஆண்டிலேயே காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கணித்து எச்சரிக்கை விடுத்து இருந்தார். தற்போதும் அவர் தலைமையில் தான் அரசியலமைப்பு அட்டவணை 6ன் கீழ் லடாக்கை தனி மாநிலமாக அங்கீகரிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கி அது வன்முறையாக மாறியது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு குலு என்ற இடத்தில் நடந்த பிரஸ்மீட்டில் சோனம் வாங்சுங் பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் சோனம் வாங்சுக் பேசுகையில், ‛‛லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியதற்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் எங்களின் உண்மையான கோரிக்கை யூனியன் பிரதேசத்தில் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குவது தான். இதன்மூலம் தான் மக்கள் லடாக்கில் சுயாட்சியை நடத்த முடியும். ஆனால் இப்போது லடாக் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்களால் நேரடி நிர்வாகத்தில் பங்கேற்க முடியவில்லை.
இது லடாக் போன்ற பலவீனமான, அதேபோல் சென்சிட்டிவான பகுதியில் ஆபத்தானதாக இருக்கும். ஒருபுறம் அரசு மக்களுக்கான ஜனநாயகத்தை வழங்காமல் இருந்து கொண்டு மறுபுறம் மக்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்காமல் இருந்தால் அங்குள்ளவர்களின் நிலைமை எப்படி இருக்கும். நீங்களே கற்பனை செய்து பாருங்கள். பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையில் லடாக் இருக்கிறது. இதனால் அங்கு மக்கள் கொதித்து எழவும் வாய்ப்புள்ளது'' என்றார். தற்போது அவரது கருத்து தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications