பெங்களூரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: போலீஸ் கமிஷனர்
பெங்களூர்: காவிரி பிரச்சனை தொடர்பாக வன்முறை வெடித்துள்ள பெங்களூரில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் சரண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை அளித்தது தொடர்பாக கன்னட அமைப்புகள் கோபத்தில் இருந்தன. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள கன்னடரின் உணவகமான உட்லாண்ட்ஸ் தாக்கப்பட்டது.
இதையடுத்து பெங்களூரில் தமிழர்களின் கடைகள், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கன்னட அமைப்பினர் தாக்கினர். இதனால் பெங்களூரில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே பள்ளி, கல்லூரிகள் மாணவ, மாணவியரை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சில இடங்களில் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இந்நிலையில் பெங்களூரில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் சரண் ரெட்டி தெரிவித்துள்ளார்.