ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்ம மரணம்... கொலையா, தற்கொலையா என போலீஸ் விசாரணை
நகரி: ஆந்திராவில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். விஷமருந்தி அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப் பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஏர்ரகுண்டலாவைச் சேர்ந்த மீராவள்ளிக்கு அஜராம்பீ (40) என்ற மனைவியும், ஆசா (20), யஷ்மிதா (18), ஷர்மிளா (15), மகன் தஸ்தகிரி (14) என நான்கு பிள்ளைகளும் உண்டு. மீராவள்ளி தனது பிள்ளைகளின் படிப்பிற்காக சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் குடியேறினார்.
இந்நிலையில், மீராவள்ளி தனது குடும்பத்தாருடன் கடந்த 1-ந்தேதி கடப்பா மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலமான கண்டி வந்துள்ளார். அவர்கள் அங்குள்ள அரசு சுற்றுலா விடுதி ஒன்றில் 3 நாட்கள் தங்குவதற்காக முன்கூட்டியே பணம் செலுத்தி தங்கியுள்ளனர்.
அறைக்குள் சென்ற மீராவள்ளி குடும்பத்தார் நேற்று மதியம் வரை அறையில் இருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் காலிங் பெல்லை அழுத்தியுள்ளார்கள். ஆனால் பதில் இல்லை. அதனைத் தொடர்ந்து கதவைத் தட்ட எத்தனித்த போது, கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
உடனடியாக அறைக்குள் பிரவேசித்த ஊழியர்கள், உள்ளே மீராவள்ளி குடும்பத்தினர் கட்டில் மற்றும் தரையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அறைக்குள் பயங்கரமான பூச்சி மருந்து நெடி வீசியுள்ளது.
உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் பூச்சி மருந்து அருந்தி அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப் பட்டது. ஆனால், அறை சுவரில் கருப்பு வண்ணத்தில் ‘‘எங்கள் அறைக்கு சிலர் கும்பலாக வந்து எங்களது வாயில் வலுக்கட்டாயமாக பூச்சி மருந்தை ஊற்றினார்கள். அந்த கும்பலில் பொத்தட்டூரைச் சேர்ந்த ரகுமான், எர்ரகுண்டலாவைச் சேர்ந்த தஸ்தகிரியும் இருந்தனர் என எழுதப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
எனவே 6 பேரும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற குழப்பம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கண்டிநகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications